கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 159 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய வெலிக்கடை, வெலிக்கடை மகளிர் பிரிவு, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் அதிகாரிகள், சிறைச்சாலைகளில் இருந்து வெளியேற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளாகிய கைதிகள் கந்தக்காடு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள் கந்தக்காடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர் எனவும் கொரோனா தொற்றுக்குள்ளாகும் பெண் கைதிகள் வெலிக்கந்தை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய அனைத்து கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை, பல்லன்சேன மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிடமாகவிருந்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 25 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|