விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021

சேதன விவசாயத்தை சிறிதுசிறிதாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தை விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளிற்கும் சில ஸ்தாபனங்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி குறிப்பாக விவசாயம் எரிசக்தி போன்ற துறைகளில் இந்த இடைவெளி காணப்படுகின்றது எனவும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இயற்கை விவசாயத்தை 30 வீத நிலங்களில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்துவதே எங்கள் தி;ட்;டம், அடுத்த சில வருடங்களில் இதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்துகொண்டனர், அவர்கள் 30 வீத இயற்கை உரத்தை 70 வீத இரசாயன உரத்துடன் கலக்கவேண்டும் என கருதினார்கள் – இரசாயன உரங்கள் இயற்கை உரங்களை பயனற்றவையாக மாற்றியதால் இது பயனளிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனது முதல் பதவிக்காலத்தில் படிப்படியாக இயற்கை உரத்திற்கு மாறுவது குறித்து எனது கொள்கை திட்டத்தில் தெரிவித்திருந்தேன், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் போதிய ஆதரவை எனக்கு வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உரக்கொள்கை குறித்து விவசாயிகளிற்கும் பொதுமக்களிற்கும் தெரிவிக்கப்படவில்லை – தெளிவுபடுத்தல்கள் இடம்பெறவில்லை, இதனால் மக்கள் மனங்களில் சந்தேகம் எழுந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உரங்கள் தொடர்பில் கல்விமான்கள் மத்தியில் இரண்டுவகையான சிந்தனைகள் உள்ளன, ஒரு தரப்பினர் இயற்கை விவசாயத்தின் பலாபலன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் அதேவேளை இரசாயன உரங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர் ஆனால் நான் இயற்கை விவசாயத்தின் பலாபலன்கள் குறித்து உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: