கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!
Friday, November 4th, 2016
நாட்டில் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக, புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அறிவுறுத்தப்பட்டாலும் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்று நுகர்வோர்களினால் எவ்விதமான பொறுப்புகளும் இன்றி, இயற்கையாக உக்காத பல்வேறு வகையான பொருட்கள், இலத்திரனியல் மற்றும் தொழிற்நுட்ப கழிவுப்பொருட்கள் இயற்கையில் கொட்டப்படுகின்றன.
வருடாந்தம் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மொத்தத்தொகையில், 60 சதவீதமானவை (210,000 மெற்றிக்தொன்) இயற்கையுடன் சேர்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சூழலை மாசுப்படுத்துபவரால் அதற்கு நட்டஈடு செலுத்தவேண்டும் (Polluter Pays Principle) எண்ணக்கருவினை செயற்படுத்துவதற்கு யோனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ்- பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஒருதொகை பணத்தை, உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நுகர்வோரிடமிருந்து தற்காலிகமாக அறவிட்டுக்கொள்ளவேண்டும்.
கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மீதப்படுகின்ற, இயற்கையாகவே உக்காத பொதிகள் மற்றும் கழிவுகளை மீளவும் கையளிக்கும் போது, தற்காலிகமாக அறவிடப்பட்ட ஒருதொகை பணம் மீளவும் கையளிக்கப்படும்.
நீண்ட காலத்துக்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் மற்றும் தொழிற்நுட்ப பொருட்கள் ஆகியவற்றுக்காக வைப்பிலிடப்படும் வைப்பீட்டை கணக்கிலெடுத்து அதற்கான வட்டியை வருடாந்தம் நுகர்வோருக்கு வழங்கப்படும்.
இதனூடாக கழிவுப்பொருட்களால் சூழலுக்கு தீங்கு இழைக்காத வகையில் முகாமைத்துவம் செய்வது இலகுவானதாகும். அதேபோல, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் பொறுப்புகளும் இதனூடாக உறுதிப்படுத்தப்படும்.
இந்த முறைமையை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும், அதற்காக அந்தந்த நிறுவனங்களில் அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிப்பதற்கும். அந்த பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய முறைமையை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
Related posts:
|
|