கரைதுறைப்பற்றில் 379 கி.மீ. வீதி இன்னும் புனரமைக்கப்படவில்லை!
Monday, January 2nd, 2017இடம்பெயர்வின் பின்னரான 7 ஆண்டுகளில் – 119, கிலோ மீற்றர் வீதிகள் மட்டுமே புனரமைக்கப்பட்ட நிலையில் மிகுதி 379 கிலோ மீற்றர் வீதிகள் இன்றுவரையில் புனரமைக்கப்பவில்லை என கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் மொத்தம் 6 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. முல்லைத்தீவு நகரை உள்ளடக்கியுள்ளன. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் முக்கிய வீதிகளாக 498 கிலோ மீற்றர் உள்ளன. இதில் கடந்த 7 ஆண்டுகளில் அனைத்து வகையான வீதிகளிலும் மொத்தமாக 119கிலோ மீற்றர் வீதிகளே புனரமைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டிய மிகுதி 379 கிலோ மீற்றர் வீதிகளும் எவ்வித அபிவிருத்தியும் இன்றிக் காணப்படுவதாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.
முல்லைத்தீவு நகரில் ஏ மற்றும் பீ தரத்திலான 90 கிலோ மீற்றர் வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டினுள் உள்ளது. இதில் 89 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது. மிகுதியாக 1 கிலோ மீற்றர் வீதி மட்டுமே புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. இதேவேளை வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான – சீ, தரத்திலான 99.41 கிலோ மீற்றர் வீதிகளில் 8.83 கிலோ மீற்றர் வீதிகள் மட்டுமே புனரமைக்கப்பட்டு மிகுதி 90.58 கிலோ மீற்றர் வீதிகள் இன்று வரை எந்தவிதமான புனரமைப்பும் இன்றிக் காணப்படுகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கும் பிரதான வீதிகளை சீர் செய்து வெளி மாவட்ட பயணிகளின் வருகைக்கும் வெளியாரின் பார்வைக்கும் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக காண்பிக்கும் நிலையில் மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கான உள்ளுர் வீதிகள் எவையுமே புனரமைக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Related posts:
|
|