ஏதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே – ஐங்கரன்

Wednesday, April 12th, 2017

உணர்ச்சிப் பேச்சுக்களையும், உசுப்பேற்றல்களையும் நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே சமூகத்தில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும்; முன்னேற்றம் காணமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

வலி. கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான அச்செழு கிராம மக்களை நேற்றைய தினம்(11) சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும், உசுப்பேற்றல்களுக்கும் எடுபட்டது மட்டுமன்றி நடைமுறைப்படாத வாக்குறுதிகளையும் நம்பி மக்கள் வாக்களித்திருந்தனர்.

இவ்வாறாக மக்களிடம் வாக்குகளைச் சூறையாடியவர்கள் தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் கைவிட்டுள்ள அதேநேரம், தாம் சுகபோக வாழ்வை நாளாந்தம் அனுபவித்து வருகின்றனர்.

தமது வாக்குகளை சூறையாடியவர்கள் தம்மை ஏமாற்றி விட்டதாக உணர்ந்து கொண்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை நாம் நன்கறிவோம்.

எமது வாக்குகளை சூறையாடிவர்களால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். அவர்களை நாம் எதிர்காலத்தில் நம்பலாமா? என்பதே மக்கள் முன்னுள்ள இன்றைய கேள்வியாகும் என்று சுட்டிக்காட்டிய ஐங்கரன் எதிர்காலத்தில் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்வதனூடாவே சமூகத்தில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும்; முன்னேற்றம் காணமுடியுமென்றும் தெரிவித்ததார்.

இம்மக்கள் சந்திப்பின்போது… அப்பகுதியிலுள்ள பொதுக்கிணற்றினை புனரமைப்புச் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஐங்கரனிடம் வலியுறுத்தியிருந்தனர். இப்பொதுக் கிணற்றில் 15 க்கும் அதிகமான குடும்பங்கள் பாவித்து வருவதாகவும், இக்கிணற்றிலிருந்தே அங்குள்ள தோட்டக் காணிகளுக்கு நீர் பாய்ச்சப்படுவதாகவும் தெரிவித்தனர்;

இதனிடையே தமக்கு எற்கனவே வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மூன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இன்னும் முழுமை பெறாமல் இருப்பதாகவும், அவற்றை முழுமை பெறச்செய்வதற்கு மேலதிக நிதியுதவி, வாழ்வாதாரம், உள்ளகப் பாதைகள் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: