ஊடகங்களுக்கு பொலிஸ் திணைக்களம் புதிய வரையறை!
Wednesday, January 11th, 2017பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது.எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே தகவல்கள் வெளியிடப்பட இருப்பதால் இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
பொலிஸ் ஊடக கொள்கை வெளியிடும் நிகழ்வு நேற்று (10) சட்டம் ஒழுங்கு அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, ஊடகங்களுக்கு செய்திகளை முறையாக அனுப்பவே புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஊடகங்களை கட்டுப்படுத்துவதல்ல எனவும் குறிப்பிட்டார்.
கொள்கை ரீதியான விடயங்கள், சர்ச்சைக்குரிய விடயங்கள், தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு செய்திகளை வெளியிடும். போதைப்பொருள் சட்டவிரோத மதுபானம்,முக்கியமான கைதுகள், குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்ட துரித முன்னெடுப்புகள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் முன்னெடுத்த உயிர்ப்பாதுகாப்பு செயற்பாடுகள்,பாரிய குற்றங்கள், பாரிய விபத்துகள், இயற்கை அனர்த்தங்கள், பொலிஸ் சேவை தொடர்பான விடயங்கள்,பொலிஸ் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட வீரதீர செயல்கள்,கைது நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் வழங்கிய விசேட ஒத்துழைப்பு என்பன தொடர்பிலே இனிமேல் செய்தி வெளியிடப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயகொடி இங்கு தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமையை மறுப்பது தொடர்பிலும், புதிய பொலிஸ் ஊடகக் கொள்கையினூடாக தணிக்கை விதிக்கப்பட்டிருப்பது பற்றியும் இங்கு ஊடகவியலாளர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பினர்.இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சின் செயலாளர், புதிய ஊடகப் பேச்சாளர் ஆகியோர் செய்திகளை வழங்குவதை மட்டுப்படுத்தவில்லையென தெரிவித்தனர். ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக செய்திகளை வழங்குவதாகவும் பொதுமக்களுக்கு செய்திகள் சென்றடைவதை ஒழுங்கமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
பொலிஸ்மா அதிபரின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவம் காரணமாக இவ்வாறு தணிக்கை விதிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் அவர்கள் நிராகரித்தனர்.
பொலிஸ்மா அதிபரின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு எவரும் தன்னை கோரவில்லையெனவும் , ஜனாதிபதியோ பாராளுமன்றமோ தன்னிடம் கோரினால் அது குறித்து விசாரணை நடத்தத் தயார் எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜனத் விஜேவீர தெரிவித்தார்.
Related posts:
|
|