இலங்கையின் முதலாவது அறிவுத் திருக்கோவில் யாழ்.நகரில் இன்று திறப்பு!
Saturday, October 15th, 2016இலங்கையின் முதலாவது அறிவுத்திருக்கோவில் இன்று (15) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படுகிறது. பிறவுண் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுத் திருக்கோவில் திறப்பு விழாவில், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதுடன், தமிழகத்தில் இருந்தும் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
இன்றும் நாளையும் நடைபெறும் திறப்பு விழா வைபவத்தில் சொற்பொழிவாளர் சுகி சிவம் உள்ளிட்ட அறிஞர்களும் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மயிலானந்தம், இலங்கை மனவளக்கலை மன்றத்தின் தலைவர் அருள்நிதி எஸ்.மதுரைவீரன் முதலானோரும் பங்கேற்கின்றனர்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலையை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையின் சகல பாகங்களில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மனவளக்கலை அறக்கட்டளையின் தலைவர் மனவளக்கலை பேராசிரியர் சி.முருகானந்தவேல் தினகரனுக்குத் தெரிவித்தார். சுமார் நானூறு பேர் பயிற்சி பெறுவதற்கான வசதிகளுடன் இந்த அறிவுத்திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி யோகத் தத்துவங்களை யாழ் மக்களுக்கும் அறிமுகப்படுத்தி மனவளம் நிறைந்த சமூகமாக மாற்றம்பெறச் செய்வதற்கு இந்த அறிவித்திருக் கோவில் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்த அவர், கல்விச் சமூகத்தினர் இதன் மூலம் பெரும் நன்மைகளைப் பெற இயலுமெனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|