இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணமும் செலுத்தப்பட்டது – பெட்ரோல் இறக்கும் பணிகளும் ஆரம்பம் – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!
Saturday, October 1st, 2022எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இரண்டு புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த தகவல்களை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், இரண்டாவது நிலக்கரி சரக்குக்கான முற்பணம் நேற்று (30.09.2022) முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டெண்டரில் இருந்த நிலுவை சரக்குகள் முன்னெடுக்கப்பட்டு, சரக்குகள் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை முழுமையான தேவைகளை பெறுவதற்கு புதிய டெண்டர்கள் கோரப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
92 ஒக்டேன் பெட்ரோலின் 35,000 மெட்ரிக் டன்களுக்கான முழுக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், பெட்ரோலை இறக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சர் நேற்றுமுன்தினம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது உற்பத்தியின் தரம், கச்சா எண்ணெய் தரம், கச்சா எண்ணெய் கொள்முதல், சுத்திகரிப்பு செயல்பாடுகள், விநியோகம் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து நிர்வாகம் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அண்மையில் அனுப்பப்பட்ட கடிதத்தில், தற்போது உள்ள நிலக்கரி இருப்பு திட்டமிடப்பட்ட செயற்பாட்டின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி வரை மட்டுமே போதுமானது என்றும் அடுத்த நிலக்கரி இருப்புக்கள் இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
000
Related posts:
|
|