இந்தியத் தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை வடபகுதி வாழ்கின்ற மீனவர்களை அதிகம் பாதிக்கும்!

Monday, July 11th, 2016

வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இழுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு இலங்கை அரசிடம் இந்தியத் தரப்பு முன் வைத்துள்ள கோரிக்கையானது வட பகுதியில் வாழ்கின்ற மீனவர்களை பெருமளவில் பாதிப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்திய மீனவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினையும்,அவர்களின் தொழில் முறமைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இருந்தும் அரசின் சில நடவடிக்கைகள் வட பகுதி மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அந்த ஆலோசனையினையும் கைவிடவில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ள அதேவேளை இந்தியாவுடன் இதற்காக போர் தொடுக்க முடியாது என்ற கருத்தினை பிரதமர் முன்வைத்துள்ளார். எனினும் எந்த தீர்வை எடுப்பதாக இருந்தாலும் வட பகுதி மீனவர்களின் இணக்கத்துடனே அகற்கான தீர்வை முன்வைப்போம் என பிரதமர் கூறியுள்ளார்.

இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை உடனுக்குடன் அரச உயர் மட்டங்களுக்கும், ஏனைய தரப்பினருக்கும் குறிப்பாக நாடாளுமன்றத்திலும் கூட குறித்த பிரச்சினையை முன் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய தரப்பினரினால் முன் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை கண்டிக்கத்தக்கது. அது நிராகரிக்கப்பட வேண்டியது.எனவே இதனை வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை(12) காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் வடமாகாண சபைக்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வடமாகாண சபைக்கு நாம் பாரிய அழுத்தத்ததை கொடுக்கவுள்ளோம்.

இந்தியத் தரப்பினால் முன் வைக்கப்பட்டுள்ள குறித்த ஆலோசனையை இரத்துச் செய்யக்கோரியும், அதனை கைவிடவும் கோரி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிபந்தனையை அன்றைய தினம் வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடவுள்ளோம்.

மேலும் ஜனாதிபதி, பிரதமர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள மகஜரினை வடமாகாண ஆளுனரிடம் கையளிக்கப்படவுள்ளது. எனவே வடபகுதி மீனவர்களை குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: