இணையத்திற்குள் ஊடுருவியவருக்கு தொழில் வழங்க பிரித்தானிய நிறுவனம் இணக்கம்!
Thursday, September 1st, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) இளைஞருக்கு, பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நிறுவனமொன்று வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இணையத் துறையில், சிறப்பான திறமைகளைக்கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் குறித்த நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயில் என்பவரால் நடத்தப்படுகிறது.
பிரித்தானியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம், தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகிறது.இணைய வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்றுள்ள இந்நிறுவனம், தகவல் தொழில்நுட்ப துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள இளைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் இஸ்ரத் இஸ்மாயில் தெரிவிக்கையில்;
“உலகில் அறிவுப் பொருளாதாரம் அதி உச்ச நிலையில் இருக்கின்ற காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறித்த இளைஞனுக்கு நல்ல தொழில் வாய்ப்பை எங்களுடைய நிறுவனத்தில் வழங்க முன்வந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன.
குறித்த இளைஞர் செய்த குற்றம் ஒரு பக்கம் இருக்க, இப்படியான திறமையுள்ள இளைஞர்கள், உலகளவில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களுக்கு நல்ல சரியான நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து, பண்படுத்தி, வளப்படுத்தி, இவர்களை நம் நாட்டுக்கு சாதமாக பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய நிறுவனங்களில் ஒன்றான எமது நிறுவனமானது, குறித்த இளைஞனை ஜனாதிபதி மன்னித்து, நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்வதற்கு வழிசமைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றார். சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இஷ்ரத் இஸ்மாயில், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


