அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன் காலமானார்!

Thursday, March 15th, 2018

ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும், மூத்த சைவத்தமிழறிஞருமான அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(13) மாலை கொழும்பில் காலமானார்.

தமிழ்நாடு மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலியைச் சேர்ந்த வடமாகாண வர்த்தக வங்கியின் முன்னாள் பிராந்திய முகாமையாளர் அமரர் எஸ். வைத்தியநாதசர்மாவின் துணைவியார் ஆவார்.

ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமை சேர்த்த இவர் ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் இவர் தனித்துவம் வாய்ந்தவராக விளங்கினார்.

கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டவராவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இன்று வியாழக்கிழமை (15) காலை முதல்  பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதிச் சடங்கு முற்பகல்-10.30 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் கல்கிசை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

Related posts: