அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செய்தார்கள் – ஜெகன் கேள்வி

Tuesday, April 18th, 2017

கடந்த காலங்களில் நாம் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தியபோது எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன் அதன் பலாபலன்களை எமது மக்கள் அனுபவிக்கும் வழிவகைகளையும் ஏற்படுத்தினார் அதை நீங்களும் அறிவீர்கள்.

தற்போது நாங்கள் அரசாங்கத்துடன் பங்காளிகளாக இல்லாவிட்டாலும் புதிய அரசாங்கத்துடன் பலமான உறவுகளை பேணி வருவதால், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எம்மால் முடியுமான வகையில் முயற்சித்துவருகின்றோம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர், வே.ம.குகேந்திரன் தோழர் ஜெகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிறீன் கிங்ஸ் சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும் இணைந்து நேற்றைய தினம்(17.04.2017)நடத்திய விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து சிறப்புரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது உரையில்,
இப்போது தாமே ஆட்சியில் ஏற்றியதாகக் கூறும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் கூட்டமைப்பினர், இதுவரை தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அரசாங்கத்தை நம்புங்கள் என்று மக்களுக்கு கூறியவர்கள், இப்போது அரசாங்கம் எதையும் செய்வதாக இல்லை என்றும், அரசாங்கம் தம்மை ஏமாற்றினால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும் கூறுகின்றார்கள்.

அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறுகின்ற கூட்டமைப்பினர், தமது கையிலுள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பிரதமருக்கு ஒப்பாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவி, அமைச்சுக்களுக்கு ஒப்பான அரசுடன் நெருக்கம், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைமை பதவிகள், வடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சி, கிழக்கு மாகாணசபையில் பங்காளிக்கட்சி என்று அதிகாரத்தில் இருந்தபோதும் அந்த அதிகாரங்களை வைத்துக் கொண்டு தமிழ்மக்களுக்கு எதையும் செய்து கொடுக்காமல், அரசியல் அதிகாரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.


இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கும் தலைவர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை எம்மிடம் முன்வைத்திருக்கின்றார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரத்தில் இன்று நாங்கள் இல்லை. ஆனாலும் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் நல்லுறவை நாம் கொண்டிருப்பதால் எம்மால் முடியுமானவரை எமது மக்களின் பலவிதமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

இங்கே நிகழ்வின் தலைவர் முன்வைக்கும் கோரிக்கைகளை வடக்கு மாகாணசபை மூலமாக இலகுவாக தீர்க்க முடியும். ஆனால் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள் அதை செயலூக்கமாக முன்னகர்த்தவில்லை. அவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றி அதை தமது நூலகத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள். அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

மத்திய அரசால் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருந்தொகையான நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் திரும்பிப்போகின்ற நிலைமையே தொடர் கதையாக இருக்கின்றது. இந்த நிலைமையை எதிர்காலத்தில் மக்கள் மாற்றி அமைக்கவேண்டும். மக்களுக்கு அர்ப்பணத்துடனும், தேவைகளை உணர்ந்தும் சேவை செய்யக்கூடியவர்களை மக்கள் இனங்கண்டு அதிகாரங்களைக் கையளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஈழமக்கள் ஐனநாயக கட்சியாகிய நாம் எமது பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்தவும், அவர்களின் விளையாட்டுத் தரத்தை உயர்த்தி, தேசிய மற்றும் சர்வதேசிய தரத்துக்கு வீரர்களை வளர்ப்பதற்கும் தேவையான பல உதவிகளைச் செய்ததுடன், அதற்கான வளங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நாம் முன்னின்று உழைத்திருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த இலக்கு நோக்கி நாம் உழைப்போம். உங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு நாம் முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.

Related posts: