அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, March 17th, 2017

நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை எச்சந்தர்ப்பத்திலும் நிறுத்தப் போவதில்லையென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் தொடர்ந்தும் கைப்பற்றப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை இந்திய மீனவர் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவினால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார்.

குடாவெல்ல பிரதேசத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு மூன்று நாட்களில் சுமார் 05 ஆயிரம் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றன. இதனால் நாட்டின் கடல் வளம் அழிக்கப்படுவது மட்டுமன்றி அவர்களால் இயற்கை வளங்களும் சூறையாடப்படுகின்றன.

கடந்த 30 வருடங்களாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு எந்தவொரு அரசாங்கத்தினாலும் நிலையான தீர்வு காணப்படவில்லை.இருப்பினும் இந்த அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 இற்கு முன்னர் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களது படகுகளும் மீன்பிடி வலைகளும் ஒரு சந்தர்ப்பத்தில் விடுவிக்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட அதே மீன்பிடிப் படகுகளில் மீண்டும் அவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறுகின்றனர். இதனால் நாம் தற்போது கைப்பற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை அரச உடமையாக்குகின்றோம்.

அவற்றை நாம் ஒருபோதும் விடுவிக்கப்போவதில்லை.இதுவரை கைப்பற்றப்பட்ட 128 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது. இந்திய மீனவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டின் கடல் வளத்தை அழிக்கின்நனர்.

அவர்கள் இரும் பினால் ஆக்கப்பட்ட படகுகளிலேயே இலங்கை கடல் எல்லைக்குள் வருகின்றார்கள். இதனை ஒருதடவை நானும் நேரில் கண்டேன்.

இந்திய மீனவர்கள் எமது கரைக்கு 02 அல்லது 3 கிலோமீற்றர் வரை நெருங்கிய தூரத்திற்கு வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர்.

கடந்த வாரம் இந்திய மீனவர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறி இந்தியா, இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தியிருந்தது. என்றாலும் எமது கடற்படையினர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது.

இது குறித்து ஆராயுமாறு நான் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்ைக முன்வைத்துள்ளேன். கடந்த இரண்டு தடவை இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர் பேச்சு வார்த்தையின்போது இந்திய மீனவர்களால் இழைக்கப்படும் அநீதி தொடர்பில் நான் இந்திய அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினேன்.

அதன்போது இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் வருவதனை இந்திய அதிகாரிகள் முதற்தடவையாக ஏற்றுக்ெகாண்டனர்.எது எவ்வாறானாலும் நாட்டின் கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை நாம் விட்டு வைக்கப்போவதில்லை.

அவர்களை கைது செய்யும் நடவடிக்ைககளை துரிதப்படுத்துமாறு நான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.

இந்திய அரசாங்கமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்ட 92 ட்ரோலர் படகுகளையும் அவர்கள் தற்போது சர்வதேச கடலில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

எதிர்காலத்தில் ட்ரோலர் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனக்கூறும் இந்திய அதிகாரிகள் சில மீனவர்களுக்காக மாற்றுத் தொழிலையும் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுவதனால் ஏற்படக்கூடிய பிரச்சினையை இருநாட்டினதும் உறவுகளில் பிரச்சினை ஏற்படாத வகையில் தீர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Related posts: