முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 27th, 2019


எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை தூக்கி நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். அதுவே எமது ஆழ்மன விருப்பமுமாகும் எனவும்  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துவரும் நிலையில் குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சரை சந்தித்து தமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதன்போது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் இதுவரை தாம் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்படவில்லை எனவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவருவதாகவும் தெரிவித்ததுடன் தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர்.  

குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 230 முன்பள்ளி ஆசிரியர்கள் இற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிரந்தனர். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

சிறார்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்கும் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவது அவசியமாகும். இதற்காக வெளிநாடுகளுக்கும் முன்பள்ளி அசிரியர்களை அனுப்பி நவீனத்துவத்துடன் கூடிய ஆளுமை மிக்க பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே  எனது திட்டமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: