ஏற்றுமதி அபிவிருத்தித் துறை எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, September 5th, 2019

1979ஆம் ஆண்டு 40ஆம் இலக்கமுடைய இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டமானது இந்த நாட்டில் செயற்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியுடன் 40 ஆண்டுகளாகின்றன.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையானது இந்தச் சட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. இன்றுவரையில் இந்தச் சபை பல்வேறு முயற்சிகளை ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இந்த நாட்டு ஏற்றுமதி அபிவிருத்தித் துறை என்பது எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? என்பது இன்னமும் கேள்விக் குறிகளைத் தாண்டி வெளியில் வந்ததாக இல்லை.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைப்பாடுகளிலிருந்து, எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரக்கூடிய சவால்களுக்கமைவாக ஏற்றுமதி அபிவிருத்தித் துறையானது பரந்தளவிலான வளர்ச்சியினை ஈட்ட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்

அதற்கான ஆயத்தங்களை செய்வதெனில், சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தில் மாத்திரமன்றி, குடிவரவு தொடர்பிலான சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்; டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை ஃ துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைஉற்பத்தி வரி விசேட எற்பாடு சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கெலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சட்டங்கள் மாத்திரம் திருத்தப்பட்டால் மாத்திரம் போதாது, வெளிநாட்டு முதலீடுகளுக்கேற்ப உட்கட்டுமாண வசதியின்மைகள் இன்னும் இந்த நாட்டிலே காணப்படுகின்றன. அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

இவை அனைத்துக்கும் முன்பதாக, சமூக அபிவிருத்தி தொடர்பில் மேலும் அவதானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இத்தகைய ஏற்பாடுகள் இன்றி, வெறுமனே எதற்கெடுத்தாலும் வரிகளை அதிகரிப்பதன் காரணமாக அது நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துகின்ற சுமைகளைப் போன்றே மறுபக்கத்தில் பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றது என்பதற்கு இங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்ற உற்பத்தி வரி விசேட சட்டமூலத்தின் கீழான கட்டளை எடுத்துக்காட்டுகின்றது.

Related posts: