இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!
Tuesday, January 21st, 2020தற்போது எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பினை உண்டுபண்ணி வருகின்ற எல்லைமீறிய கடற்றொழில் முயற்சியான இந்திய இழுவலைப் படகுகள் மூலமான பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்ள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் 9 ஒழுங்குவிதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கரையோரங்களை அண்டியதாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற இந்திய – குறிப்பாக தமிழ்நாட்டு இழுவலைப் படகுகள் மூலமான தொழிற் செயற்பாடுகளை மாற்றி, அவற்றை ஆழ்கடல் தொழிலாக முன்னெடுப்பதற்கென இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசுக்கு பாரியளவு நிதியினை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்திய மத்திய அரசின் இந்தச் செயற்பாட்டினை நாம் வரவேற்கின்றோம். அந்த வகையில் எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேநேரம், மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, இந்தியப் பிரதமர் மட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர்களால் எமது நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடி இருந்தததையும் நான் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன்.
அத்துடன், கடற்றொழில் சார்ந்த சட்டமூலத்திலும் நாங்கள் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய தேவையில் இருக்கின்றோம். குறிப்பாக, பிரதேசத்திற்குப் பிரதேசம் கடல் வளங்களை ஆய்வு செய்து அறிந்து, அதற்கேற்பதான தொழில்சார் ஒழுங்குவிதிகளைக் கொண்டு வர வேண்டியுள்ளது.
கடலோரம் சார்ந்து வாழ்ந்து வருகின்ற மக்கள் தங்களது வாழ்விடங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்ற நிலையில், இம் மக்களது வாழ்விடங்கள் முதற்கொண்டு, தொழில் வாய்ப்புகள் வரையிலான அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டதான விஞ்ஞானபூர்வமான அறிவியல் சார்ந்த நிலைபேறான அபிவிருத்தியே இன்றைய கடற்றொழிற்துறையின் தேவையாக இருப்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
மேலும், களப்புகளை மையமாகக் கொண்ட கடலுணவு மேம்பாடு குறித்தும் நாம் வெகு அவதானத்தைச் செலுத்தி வருகின்றோம். எமது நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 1 இலட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் களப்பு சார் நீரக வள மூலங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறால், கொடுவா மீன், களவாய் மீன், கடலட்டை மற்றும் நண்டு போன்ற பண்ணைகளை மேலும் உருவாக்குவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இதன் மூலமாக திட்டமிட்டுள்ளோம்.
இதேநேரம், நன்னீர் மீன்பிடித் தொழிற்துறை தொடர்பிலும் எமது விN~ட அவதானங்கள் செலுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இத்துறைக்கென எமது நாட்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமான சதர கிலோ மீற்றர் நீரக வள மூலங்கள் காணப்படுகின்றன.
அந்தவகையில், தற்போது நீரக வள மூலங்களைக் கொண்ட நீர் நிலைகளை மையப்படுத்தி மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உரியதான தற்போது தூர்ந்து போயுள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை இனங்கண்டு, அவற்றை மீளப் புனரமைத்து, கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து நன்னீர் மீன்பிடித்துறையை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்தத் திட்டமானது விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு போன்ற மூவித துறைகள் சார்ந்த பயன்களைத் தரக்கூடிய திட்டமாகும். இதன் ஊடாக கிராம மட்டங்களின் பொருளாதாரத் துறையினை மேம்படுத்துவதும், கிராம மக்களின் போ~hக்கு நிலையினை மேம்படுத்துவதும், ஏற்றுமதிப் பொருளாதாரத் துறைக்கு வலு சேர்ப்பதும் எமது எதிர்பார்ப்பாகும் என்பதையும் இங்கு அறியத் தருகின்றேன் என்றார்.
Related posts:
|
|