வீடமைப்புத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 31st, 2016

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட வீடுகளைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் தேவை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையானது கடன் அடிப்படையில் வீட்டுத் திட்டங்களை எமது மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களால் அவ் வீடுகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் முதற்கட்ட கடன்களைப் பெற்று பாரிய பொருளாதார நெறுக்கடிகளுக்கு மத்தியிலும் எமது மக்கள் தங்களுக்கான வீடுகளை அமைக்க ஆரம்பித்துள்ள போதிலும், அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார வசதியின்றி அவலப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் பாதி முடிக்கப்பட்ட வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் காடுகள் அடர்ந்து காணப்படுவதுடன் எமது மக்கள் குடியேற இயலாத நிலையும் காணப்படுகின்றது.

எனவே, இம் மக்களுக்கு பயனுள்ள வகையில் விஷேட மாற்றுத் திட்டமொன்றை தேசிய வீடமைப்பு அதிகார சபை விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் முக்கிய க...