வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் – ஜானாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்!
Monday, April 13th, 2026
…….
வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என்றும், விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும், அதன் மூலம் வெடுக்குநாறி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுணில் செனவி கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுக்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழில் நாம் எமது நாட்டின் வரலாற்றைப் பார்க்கின்றபோது,
‘இலங்கையின் பெருநிலப்பகுதியில் உள்;ள நாக நாட்டின் வன்னிப்பகுதியில் அக்காலத்தில் பல சிற்றரசுகள் இருந்திருக்கின்றன. வன்னியின் மலைப்பாறைகளில் வெட்டப்பட்ட ஐம்பத்து நான்கு பிராமிகல்வெட்டுக்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளன. அவை, மகாகச்சட்கோடி (4), எருப்பொத்தானை (12), பெரிய புளியங்குளம் (35), வெடுக்குநாறி மலை (3) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவையாவும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள்.
இலங்கையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகளில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவற்றிலேதான் தமிழ்மொழியின் செல்வாக்கு மிகக்கூடுதலாகக் காணப்படுகின்றது. அவற்றிலே வேள், வேலு, பருமக(ன்), அபி (அவ்வி) ஆகிய சொற்கள் வருகின்றன. அவற்றில் ஒரு கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகின்றது:-
‘பருமக அஸ அதேக வேளஸ ஜாயா திஸாய லெணெ”
இதன் வாசகம்: பருமகனும் குதிரைகளின் அதிபனுமாகிய வேளினது மனைவி திஸாவின் குகை என்பதாகும்.
சங்ககாலத் தமிழகத்தில் சிற்றரசர்களை ‘வேள்”, ‘வேளிர்” என அழைப்பதுண்டு. அதேவழக்கம் இலங்கைத் தமிழரிடைNயும் இருந்திருக்கிறது. அந்தவகையில், இதில் வரும் வேள் ஒரு சிற்றரசனாக இருக்கலாம். அவன் சிற்றரசன் மட்டுமல்லாது, குதிரைகளின் அதிபனாகவும் இருந்திருக்கிறான்.” என, பிரபல தமிழ் வரலாற்றாசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் தனது வரலாற்று ஆய்வு நூலில் தெரிவித்துள்ளார்கள்.
பிராமி எழுத்துக்களை முதன்முதலில் வட இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி பயன்படுத்தினார் என்றும், பிற்காலத்தில் இது திராவிட மொழியுடன் கலந்து தமிழ் எழுத்துக்களுக்கு ஒப்ப பிராமி எழுத்துக்கள் மாறி அதனை இங்குள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தினர் எனவும் தமிழ் வரலாறு கூறுகின்றது.
இத்தகைய எழுத்துக்களின் வாசகங்களைப் பார்க்கின்றபோது இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் வரலாறு மேலும் தெரிவிக்கின்றது.
இத்தகைய வாசகங்கள் திராவிட மொழிக் கலவை கொண்டுள்ளமையால், அவை பார்க்கும் பார்வைக்கு சிங்கள வாசகங்கள்போல் தோன்றும் எனவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இன்றும்கூட தமிழிலும் சிங்களத்திலும் இரு மொழிகளுக்கும் நெருக்கமான பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.
இத்தைய நிலையில், வெடுக்குநாறி மலை தொடர்பிலான தொல்லியல் ஆய்வுகளை மீள மேற்கொள்வதுதான் சிறந்த வழி என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல். மேற்படி தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, அப்பகுதியில் வாழ்கின்ற பெரும்பான்மை மக்களது உணர்வுகளையும் மதிக்கும் வகையில் அந்த இனத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்களை – வரலாற்று ஆய்வாளர்களையும் இணைத்துக் கொள்வது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வுகளை அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பிரச்சினைகள் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது என்பதால். இவற்றில் தலையிடுகின்றபோது மிகவும் அவதானமாக செயற்படுவதே நல்லது.
எனவே, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆய்வாளர்களையும் இணைத்துக்கொண்டு, வெடுக்குநாறி மலை தொடர்பில் மீண்டும் ஆய்வினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,
வெடுக்குநாறி மலை விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாலும், மீண்டும் ஆய்வினை மேற்கொள்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாலும், அமைச்சர் அவர்கள் கூறிய வர்த்தமானி அறிவித்தலை பிற்போடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
Related posts:
|
|
|


