விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019

கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில் பசுமையான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றது என்ற கேள்விக்கு இடம் வைத்திருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டு மக்கள் மீது பாரிய கடன் சுமைகளை சுமத்திவிட்டு, மேலும், மேலும் கடன் படுனர்களாகவே எமது மக்களை எதிர்பார்க்கின்ற ஒரு நிலையில், எமது மக்கள் இத்தகைய கடன் சுமைகளிலிருந்து விடுவிக்கப்படக் கூடிய காலம் எப்போதாவது வருமா? என ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியே இருக்கின்றது.

இன்று இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்காக எதிர்நோக்கியிருக்கின்ற விலைகள் மிக அதிகமானது.  இயற்கையின் சீற்றம் ஒரு பக்கமாக வாட்டி எடுத்து வருகின்ற நிலையில், வாழ்வாதாரங்கள் என்பதே கேள்விக் குறியாக்கப்பட்டு, அதிகரித்துள்ள வரிகளின் வலிகளாலும், விலையேற்றங்களின் சுமைகளாலும் மக்கள் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் இத்தகைய துயர நிலைமைகளிலிருந்து மீள வேண்டும். மீட்கப்பட வேண்டும். அதற்கான வரவுகளை இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் உருவாக்கக்கூடிய திட்டங்கள் முன்னெடுகப்பட வேண்டும்.

குறிப்பாக இன்று இருக்கக்கூடிய ஏற்றுமதி சார்ந்த இந்த நாட்டு உற்பத்திகளை முதலில் காப்பாற்றிக் கொள்வதற்கும், அவற்றைப் பேணி வளர்த்தெடுப்பதற்கும் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதே நேரம் புதிய உற்பத்திகளால் நவீன உலக சந்தைவாய்ப்புகளை எட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

சூழவும் கடலைக் கொண்டுள்ள இந்த நாட்டில் கடற்றொழில் என்பது வெறுமனே ஒரு வெற்றிலை பாக்குக் கடையைவிட மோசமான நிலையிலேயே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விவசாயத்துறை என்பதும் இன்னும் சில காலங்களில் எமது மக்களுக்கு தொல்பொருளாகிவிடுமோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நாடு கொண்டிராத வளங்கள் இல்லை. அந்த வளங்களை பொருளாதாரமாக்கிக் கொள்வதற்கு இன்னமும் போதிய தூர நோக்கிலான திட்டங்கள் இல்லை. இருப்பதை எல்லாம் விற்று, விற்று, கடன்களை செலுத்திக் கொண்டும், இந்த செயற்பாடுகளையே மேற்கொண்டு வாழ்வதற்காக மேலும் மேலும் கடன்களைப் பெற்றுக் கொண்டும், காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதால், எவ்விதமான பயன்களும் ஏற்படப்போவதில்லை.

Related posts: