வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வழிமுறைகளில் தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, March 23rd, 2018

மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகளில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் மதுவரி தொடர்பிலான விஷேட சட்டமூலங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் எமது பகுதிகளில் பல்வேறு கைத்தொழிற்துறைகள் செயற்பட்டு வந்துள்ளன. யுத்தம் காரணமாக அத்துறைகள் அனைத்தும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் போதிய செயற்திறனுடன் முன்னெடுக்கப்படாதுள்ள நிலையில், இருக்கின்ற வாழ்வாதார துறைகளும், பல்வேறு தடைகளால் உரிய பயன்பாடுகளை எமது மக்களுக்கு தராத நிலையில், எமது மக்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக எங்கு போய், என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியையே முன்வைக்க வேண்டியுள்ளது.

1971ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தென்னை அபிவிருத்திச் சட்ட திருத்தத்தின் மூலமான 1975ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலமாக பனை அபிவிருத்திச் சபையானது சட்ட ரீதியாக உருவாக்கப்பட்டதன் நோக்கமானது, பனையையும், பனைத் தொழிலையும் பாதுகாத்து, அதன் மேம்பாட்டிற்காக பாடுவது என உள்ள போதிலும், கடந்த கால யுத்தம் காரணமாக எமது பகுதிகளில் பெருந்தொகையான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பனை சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபட்டு வந்திருந்த மக்கள் இடப்பெயர்வுகளுக்கும், பல்வேறு இழப்புகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டிருந்தது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், எமது மக்கள் போதியளவு வாழ்வாதார வசதிகளின்றிய நிலையிலேயே மீளக் குடியேற வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.  இன்றும்கூட இத்தகைய நிலைமைகளில் போதியளவு மாற்றங்கள் ஏற்படாமலேயே இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

இத்தகைய நிலையில் இன்று இந்த நாட்டின் பொருளாதார நிலைமையை எடுத்துக் கொண்டாலும் திருப்தி தரக்கூடிய நிலையில் இல்லை. ஆமெரிக்க டொலரின் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 157 ரூபாவினை எட்டிவிட்டுள்ளது. நிலையான வருமானத்தினை எட்டக்கூடிய உற்பத்திகளின் வறுமை நிலைக்கு நாடு முகங்கொடுத்து வருவதும், முதலீட்டாளர்களின் தடுமாற்ஙறங்களும் இல்லாமல் இல்லை.

எனவே, இத்தகையதொரு நிலைமை நாட்டில் நிலவுகின்ற காலகட்டத்தில் எமது பகுதிகளில் – குறிப்பாக வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் எமது மாகாணத்தில் – மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கு இருக்கின்ற வாய்ப்புகளிலும் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றப்படாது - அமைச்சர் டக்ளஸிற்கு காணி ...

‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் ...
சிறந்த ஆரம்பமே ஆரோக்கியமான பலாபலனை தரும் - அதற்கான இலக்கை அடைய உறுதியுடன் பயணியுங்கள் – கட்சியின் வே...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...