வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Friday, March 22nd, 2019

இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில் கூறுகின்ற நீங்கள், கால்நடைகள் தன்னிறைவு காண்பதற்கான மேய்ச்சல் தரைகளை அமைப்பது தொடர்பில் அக்கறை காட்டுவதில்லை. இப்படியே போனால் இந்த நாட்டின் கால்நடைத்துறை அபிவிருத்தி என்பது, நாளடைவில் காணாமற்போய்விடும் நிலையே எற்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அதேநேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாய செய்கைக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் தடையாக சில திணைக்களங்களும் செயற்பட்டு வருகின்றன. தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்திச் சபை என்பன இவற்றுள் மிக முக்கியமானவை. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இந்தத் திணைக்களங்களுக்கு காணிகள் குட்டி போடுகின்ற அதிசயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக நடக்கின்றது எனக் கூறலாம்.  

எனவே கௌரவ அமைச்சர் பி ஹெரிசன் அவர்கள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை அந்தந்த மாவட்டங்களில் உருவாக்குவது தொடர்பில் உரிய அவதானங்களை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts: