வடக்கு – கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, September 7th, 2018

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாதியர்களுக்கான பற்றாக்குறையானது மிக நெடுங் காலமாக நிகழ்ந்து வருகின்ற நிலையில் இந்தப் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைவதற்கு விஞ்ஞான பாடமும் முக்கியமாகும் என்பதால் கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் எந்தப் பாடங்களில் சித்தியடைந்திருப்பினும் அவர்களை தாதியர்களாக உள்வாங்குவதற்கும் அதே நேரம் ஆண் தாதியர்களை உள்வாங்கும் விகிதத்தை அதிகரிப்பதற்கும் ஒரு விஷேட ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு நான் பல முறை இந்தச் சபையிலே கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

அந்தவகையில் இந்த இரு விடயங்களையும் முன்னெடுப்பதற்கு கௌரவ சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முன்வந்திருப்பதாக ஊடகங்களின் மூலமாகத் தெரிய வந்திருக்கும் நிலையில் முதலில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியை அமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் அதே நேரம் அண்மையில் மருந்து வகைகள் சிலவற்றின் விலைக் குறைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த விடயமும் வரவேற்கத்தக்க விடயமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் 2015ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரச் சபைச் சட்டத்தின் கீழான கட்டளை கணக்காய்வாளர் திணைக்கள உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இதன்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2015 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் எந்தப் பாடங்களில் சித்தியடைந்திருப்பினும் அவர்கள் தாதியர் சேவைகக்கு உள்வாங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக எமது பகுதிகளில் கல்வித் தரம் பின்னடைவிற்கு உட்பட்டுள்ள நிலையில் இத்தகையதொரு ஏற்பாட்டினை மேற்கொள்கின்றபோது ஏதேனும் தடைகள் வருமாயின் – குறிப்பாக தாதியர் சேவையின் தரங்கள் குறையும் என்றவாறான தடைகள் வருமாயின் – இவ்வாறு விஷேட ஏற்பாட்டின் மூலமாக இணைத்துக் கொள்ளப்படுவோருக்கு விஷேட பயிற்சிகளை வழங்க முடியும் என நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்

Related posts: