வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை – டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டு!
Tuesday, July 4th, 2017இன்று எமது மக்களில் கணிசமான தொகையினர் இடம்பெயர்ந்த நிலையில் எமது நாட்டுக்குள்ளும் இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையினுள் இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் நண்பர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலுமாக வாழ்ந்து வருகின்ற பல ஆயிரக் கணக்கான மக்கள் இதுவரையில் மீளக் குடியேற்றப்படாத நிலை காணப்படுகின்றது. இதற்கு முக்கியக் காரணம் இம் மக்களது தொடக்க நிரந்தர வதிவிடங்களில் படையினர் மற்றும் காவல்த்துறையினர் நிலை கொண்டிருப்பதாகும்.
இம் மக்கள் தங்களது சொந்த வதிவிடங்களை விடுவிக்கக் கோரி அகிம்சை வழியிலான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்தப் போராட்டங்களுக்கு இதுவரையில் எவ்விதமான சாதகமான பதில்களும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. எமது மக்களது நிரந்தர வதிவிடங்களை விடுவித்துக் கொடுப்பதற்கு பொறுப்பானவர்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து தவறி வருவதானது மிகவும் துரதிஷ்டவசமான நிலையாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் மக்களது போராட்டங்கள் வீதிக்கு வரும் முன்பதாகவே அம் மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க இயலாதவர்கள் அம் மக்கள் தமது தேவைகள் நிமித்தமாகப் போராட்டங்களை மேற்கொள்கின்ற நிலையில் அதனுள் புகுந்து கொண்டு தமது சுயலாப அரசியலை தொடரும் போக்குகளே காணப்படுகின்றன.
இத்தகைய நிலையில் பார்க்கின்றபோது இந்த மக்கள் தங்களது வாக்குரிமைக்கான உரிமையை தங்களது தொடக்க நிரந்தர வதிவிடங்களில் மேற்கொள்ள இயலாத நிலையிலேயே இருந்து வருகின்றனர் என்பது குறித்தும் நாம் அவதானங்களைச் செலுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|