வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது – மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? – விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, August 17th, 2017
2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு, அதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகின்ற மக்களுக்கு மாற்று பயிர்ச் செய்கைகளை அறிமுகப்படுத்தி, அதனை ஊக்குவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது, வடக்கில் புகையிலை உற்பத்தி தொடர்பில் அரச அதிகாரிகள் தரப்பில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவரும் நிலையில், தம்புள்ளை பகுதியில் ஏற்கனவே நெல் மற்றும் உப உணவுப் பயிர்கள் பயிரிடப்பட்ட நிலங்கள் தற்போது புகையிலை உற்பத்திக்கு மாற்றப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனை எந்த வகையில் நியாயமானதாக ஏற்றுக் கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இம்முறை யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் 1,956 விவசாயிகள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 27,952 குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், சுமார் 3,035 குடும்பங்கள் மேற்படி புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் நூற்றுக்கு 10.87 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைவிட இப் பயிர்ச்செய்கையில் தங்கியிருப்போரது எண்ணிக்கையும் பாரியதாகவுள்ளது.
இந்த நிலையில,; அரசின் கொள்கைக்கு ஏற்ப இலங்கையில் புகையிலையைத் தடை செய்யும் நிலைப்பாட்டுக்கு அமைவாக புகையிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற வடக்கின் விவசாய மக்களுக்கு அரச அதிகாரிகள், மேற்படி உற்பத்திகளை நிறுத்தும் வகையிலான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. எமது விவசாயிகள் புகையிலை உற்பத்தியை நிறுத்தினால், அதற்கான மாற்றுப் பயிர்ச் செய்கையாக ஊக்குவிக்கப்படக்கூடிய பயிர்ச் செய்கைகள் யாவை என்பது தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது யாழ் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப உணவுப் பயிர்களையே மேற்படி புகையிலை உற்பத்தியாளர்களும் மேற்கொள்ள முடியுமென்றே அதற்கான பதில் விவசாய அமைச்சு தரப்பில் கூறப்பட்டது. எனினும் வடக்கில் எமது மண் வளத்தை ஆராய்ந்து, தற்போதைய உலகச் சந்தையின் கேள்விகளுக்கு பொருத்தமான, பொருளாதார ரீதியில் அதிகம் பெறுமதிவாய்ந்த பயிர்களை அறிமுகஞ் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்.
இத்தகையதொரு சூழ்நிலையில், வடக்கில் புகையிலை உற்பத்தியை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தம்புள்ளை, கலேவெல, தேவஹூவ போன்ற பகுதிகளில் ஏற்கனவே நெல் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சுமார் 2000 ஏக்கர் நிலம், தற்போது புகையிலைச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, புகையிலைச் செய்கை அமோகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.
நெல் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் அதிக செலவினங்களை ஏற்க வேண்டியுள்ளதாகவும், அதற்குரிய நீர் வசதிகள் போதியளவில் கிடைப்பதில்லை என்பதாலுமே அப் பயிர்ச் செய்கைகள் கைவிடப்பட்டு, புகையிலைச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது புகையிலைச் செய்கைக்குத் தேவையான நீர் கிடைப்பதாகவும் தெரிய வருகின்றது.
எமது நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி மற்றும்  உப உணவுப் பொருட்களின் இறக்குமதிகளுக்காக அதிகளவில் அந்நிய செலாவணியை இழக்க வேண்டியுள்ள நிலையில், புகையிலையை தடை செய்யவுள்ள நிலையில் இந்த செயற்பாடானது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது குறித்து விவசாய அமைச்சு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
புகையிலை உற்பத்தி தடை எனில், அதனை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கும், அதற்கான மாற்றுப் பயிர்களை விரைவில் அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் விவசாய அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – ...
தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் கூடிய அக்கறை செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
யாழ்.ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பிரதிபலிப்பு - எழுதாரகை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது!