வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை – கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, January 4th, 2019சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் தமிழ் இளைஞர்கள் பணிபுரிவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவும். அதை உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி எமது இளைஞர் யுவதிகளை வறுமையான வாழ்வுக்குள் தள்ளிவிட வேண்டாம்.
அழிவு யுத்தத்திற்கு முகங்கொடுத்த பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள எமது மக்களுக்கு எவ்வகையிலும் உதவாதவர்கள் சிவில் பாதகாப்புத் திணைக்களத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் பணிபுரிவதை தடுக்க எத்தனிப்பது அர்த்தமற்ற செயற்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி முரசுமோட்டையிலுள்ள கோரக்கன் குடியிருப்பு கிராகிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களை சந்தித்து அவர்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
போராட்டம் என்பது இருப்பதை பாதுகாத்துக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறவேண்டியதொன்றாகும். நாம் இயக்கங்களின் வேறுபாடுகளை பார்ப்பது கிடையாது. எமக்கும் இதர இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடானது போராட்ட வடிவில்தான் இருந்திருக்கின்றது.
மக்களின் நலன்களை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்துவருகின்றோம். கடந்தகாலத்தில் நாம் முன்னெடுத்துச் சென்ற வழிமுறைகள்தான் இன்று நிதர்சனமாகியுள்ளது. அந்தவகையில் யுத்தம் நிறைவடைந்தபின் கிளிநொச்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை நாம் எவ்வாறு தூக்கி நிறுத்தியிருந்தோமோ அதுபோல் யுத்தப் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்த மக்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து அவர்களை எதிர்காலம் மீதான நம்பிக்கையுடன் வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றேன்.
இதேவேளை எமது இளைஞர் யுவதிகள் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்புக்களை பெற்று தமது குடும்ப பொருளாதார தேவையை ஈடுசெய்து வருகின்றார்கள். இன்றும் இளைஞர் யுவதிகள், அங்கவீனமடைந்தவர்கள், கைம் பெண்களென பல ஆயிரம் பேர் அவர்களுக்குரிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்காமலும் சுயபொருளாதார உதவிகள் கிடைக்காமலும் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
அவர்களின் வறுமையை போக்க வேலைவாய்ப்புக்களை உருவாக்காமாலும் சுய தொழில் உதவிகளை பெற்றுக்கொடுக்காமலும் வெறுமனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலை செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சித்தரிப்பதும் அவர்களை விமர்ச்சிப்பதுமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நன்மைகளை பெற்றுத்தரப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|