வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Monday, December 5th, 2016
வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்படி அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டுத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனது தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிய எதிர்பார்க்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கயிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –
கடந்த கால யுத்தத்தின் இறுதிக்காலம் வரையிலான நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையையும், அதற்கான உட்கட்டுமானங்களையும் மீளக் கட்டி எழுப்பப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களது அவதானத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.
அந்த வகையில், வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்படி அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தில் விiயாட்டுத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனது தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையின்போது அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும், வடக்கில் சகல வசதிகளையும் கொண்ட சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, 2011ம் வருடம் ஜூலை மாதம் 20ம் கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்கென சுமார் 325 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு, விளையாட்டரங்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2013ம் வருடத்தில் இது பூர்த்தி செய்யப்பட்டு, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.
அதன் பின்னர், இந்த விளையாட்டரங்கின் பணிகள் தொடர்பாக நான் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி இந்தச் சபையில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த மைதான நிர்மாணப் பணிகள் முடிக்கப்பட்டு, இங்குதான் 2016ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடத்தப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் அன்று கூறியிருந்தும், தேசிய விளையாட்டு விழா துரையப்பா மைதானத்திலேயே நடத்தப்பட்டது.
எனவே, இதன் பணிகள் எந்தளவில் இருக்கின்றன என்பதையும், இந்த விளையாட்டு மைதானத் திட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதாக அமைச்சர் அவர்கள் கூறகின்ற விளையாட்டுத் தொகுதியும் ஒன்றா என்பது குறித்தும்,அதே நேரம், யாழ்ப்பாணத்தில் சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டுத் தொகுதி ஒன்று அமைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மைதானமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கைகளுக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கௌரவ அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், மேலும், வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை நாடளாவிய ரீதியில் ஏனைய சங்கங்களுடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத் துறைக்குத் தனது அளப்பரிய பங்களிப்பினை வழங்கியுள்ள திருவாளர் சதாசிவம் அவர்களது பெயரை மேற்படி வடக்கில் அமைக்கப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்குச் சூட்டுமாறும், இந்த ஏற்பாடுகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது உரையில் அறியத் தருவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.
Related posts:
|
|