யுத்த அழிவுச் சின்னங்கள் அகற்றப்படுவது அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, May 31st, 2017
எமது தாயகப் பிரதேசத்தில் யுத்த அழிவுச் சின்னங்களை கண்காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசுகளிடம் தொடர்ச்சியான கோரிக்கையை நான் விடுத்து வந்திருந்தேன்.
இரண்டு நாடுகளுக்கிடையே யுத்தம் நடந்திருந்தால் யுத்தச் சின்னங்களையும், யுத்த வெற்றிச் சின்னங்களையும் காட்சிப்படுத்துவதில் அர்த்தமிருக்கும்.
இலங்கையில் நடந்ததோ உள்நாட்டு யுத்தமாகும். ஜே.வி.பியினருடன் யுத்தம் நடத்திய அரசு அது தொடர்பாக நினைவுச் சின்னங்களை இவ்வாறு காட்சிப்படுத்தவில்லை.
வடக்கு கிழக்கில் நடத்திய யுத்தங்களில் அழிவுச் சின்னங்களையும், யுத்த வெற்றிச் சின்னங்களையும் நிறுவியதானது, யுத்தத்தில் ஒரு இனம் வென்றதாகவும், இன்னொரு இனம் தோற்றதாகவும் உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.
யுத்தம் ஏற்படுத்திய காயங்களையும், வடுக்களையும் இனங்களுக்கிடையிலான இடைவெளிகளையும் சரிசெய்து இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பரஸ்பரம் சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும் இருப்பது அவசியமாகும்.
அவ்வாறில்லாமல் யுத்தகால அவலங்களை நினைவுபடுத்தும் சின்னங்களும், காட்சிப்படுத்தல்களும் பார்வைக்கு வைக்கப்படுமானால் அது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதகமாகவே அமையும்.
யுத்த அழிவுச் சின்னங்கள் அகற்றப்படாமல் இருக்குமானால் எமது மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள ரணங்கள் ஆறாத வடுவாகவே இருக்கும். அவ்வாறானதொரு மனோ நிலையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பதும் சாத்தியமானதாக இருக்காது என்பதையும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
குண்டு வெடிப்புக்களுக்கு இலக்கான இலங்கை மத்திய வங்கி, தலதா மாளிகை போன்றவற்றை காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் புதுப்பொழிவுடன் கட்டியெழுப்பியதைப்போல், யாழ்ப்பாண நூலகத்தை நாம் புதுப்பொழிவுடன் கட்டியெழுப்பினோம்.
இவ்வாறு பல கட்டிடங்களை புதிதாகக் கட்டியெழுப்பியபோதும், கிளிநொச்சியில் நீர்த்தாங்கி, ஆனையிறவில் கவசவாகனம் என சில இடங்கள் இன்னும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் சுட்க்காட்டி இருந்தேன்.
எனது கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உடைந்த நீர்த்தாங்கியை படையினர் விடுவித்துள்ளதுடன் அதை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை வரவேற்கின்றேன்.

Related posts:
|
|
|


