யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்ப டுத்தியிருந்தால் குடிநீர் பிரச்சி னைக்கு தீர்வு கண்டிருக்கமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 10th, 2017

யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டில்  ஏற்பட்டுள்ள குடிநீருக்கான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டிருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (10) நடைபெற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடபகுதியில் தற்போது நீர்நிலைகளில் நீர் வற்றிக்காணப்படும் நிலையில் மக்கள் குடிநீரையும் ஏனைய தேவைகளுக்கான நீரையும் பெற்றுக்கொள்வதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளைச் சந்தித்துவருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தமது விவசாயச் செய்கைகளை மேற்கொள்ளமுடியாமலும் கால்நடைகள் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில் மக்கள் குடிநீர் மட்டுமன்றி ஏனைய தேவைப்பாடுகளுக்குமாக இலகுவாக நீரைப்பெற்றுக்கொள்ளும்முகமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட யாழ் – இரணைமடு குடிநீர் திட்டத்தை முன்னைய ஆட்சிக்காலத்தின்போது முன்னெடுக்க நாம் முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கியிருந்தோம்.

இருந்தபோதிலும் தமது சுயநலன்களுக்காகவும் அரசியல் சுயலாபங்களுக்காகவும் குறித்த அருமையான திட்டத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு தடுத்துநிறுத்தியிருந்தனர்.

இதனால் தீவகம் உள்ளடங்கலான யாழ்.குடாநாடு மட்டுமல்லாது கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் யாழ் – இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தினூடாக நீரை பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் கைநழுவிப் போனமையானது எமக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றமான செய்தியே என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

Related posts:

வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் ...
மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொட...

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்...
நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு - அம...