முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Wednesday, November 23rd, 2016
நான் ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அவதானத்துக்குக் கொண்டுவந்ததைப்போல், முப்படைகள், காவல்துறை மற்றும் சிறைச்சாலைகளுக்கென ஆளணிகளை இணைத்துக்கொள்ளும்போது, இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில், அந்த ஏற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய தேசிய கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றுமுன்தினம்(21) 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் சனத்தொகையினதும் இன விகிதாசாரத்தினதும் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப முப்படையினரும் காவல்துறையினரும் பணியில் அமர்த்தப்படவேண்டும் என்றும், போதிய அளவில் அந்த அந்த மாவட்டங்களில் வசிக்கின்ற மக்களது மொழிகளினால் பணிகளை மேற்கொள்ளத்தக்க அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் தேசியப் பாதுகாப்பையும் இலகுவாகப் பேணமுடியும் என்பதுடன், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைப் பயனுள்ள வகையில் கட்டியெழுப்பவும் முடியும். தொழில் வாய்ப்பின்மைப் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு காண்பதற்கும் சமூக, ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|