மாற்று வலுவுடையோருக்கு உதவ பிரதமரிடம் புதிய திட்டத்தை கையளித்தார் டகளஸ் தேவானந்தா.
Tuesday, May 17th, 2016
இயற்கை அனர்த்தங்களினாலும், பிறப்பியல்பாகவும், யுத்தத்தினாலும் அங்கங்களை இழந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளாகியவர்களுக்கும் விஷேட உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும், ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாசனத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னர் இருந்தபோது, மாற்றுவலுவுடையோரின் பிரச்சனைகள், தேவைகள் தொடர்பில் கூடுதல் அக்கறையோடு திட்டங்களை செயற்படுத்தியதோடு, ஐக்கிய நாடுகள் சபையிலும், மாற்றுவலுவுடையோருக்கான சாசனத்தில் இலங்கையின் சார்பில் கையொப்பமும் இட்டிருந்தார்.
அக்கால கட்டத்தில் சமூகத்தில் நலிவடைந்தோர், பிறப்பியல்பாகவும், யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டு மாற்றுவலுவுடையோராக மாறியவர்கள் தொடர்பில் விஷேட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தற்போது அவ்வாறான ஏற்பாடுகள் உரியவர்களை சென்றடைவதிலும், அவர்களுக்கான உதவிகள் முறையாக கிடைப்பதிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கவலை தருகின்ற அவ்வாறான செய்திகளையிட்டு நான் மிகவும் வேதனைப்படுகின்றேன். மாற்றுவலுவுடையோரால், எல்லா நேரமும், எல்லா இடங்களுக்கும் அலைந்து திரிந்து தமது துன்பங்களையும், தேவைகளை வெளிப்படுத்த முடியாது. எனவே துறைசார்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும் மனிதாபிமானத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் இவர்களை அணுகி உதவ வேண்டும் அதற்கு புதிய அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கான கோரிக்கையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றுவலுவுடையோருக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு அமைவாகவும், தற்போதைய நாட்டின் சூழலுக்கு ஏற்பவும், மாற்றுவலுவுடையோருக்கு பயன்மிக்கதொரு திட்டத்தையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடம் தமது கோரிக்கையுடன் கையளித்துள்ளார்.
Related posts:
|
|