மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!
Thursday, May 10th, 2018
மாகாண சபை முறைமையினை இன்றும்கூட அரவணைத்துக் கொண்டு, அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சாரார், தங்களது சுய அரசிலுக்காக அதனை விமர்சித்து வருகின்றனரே அன்றி, இந்த முறைமையின் ஊடாக எமது மக்களுக்குரிய பணிகளை மேற்கொள்வதற்கு முன்வருவதில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
உண்மையில், மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது. வந்து, குந்திக் கொண்டு மாகாண சபையின் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு, மேலதிகமாக ஊழல், மோசடிகளும் செய்து கொண்டு, அதன் பயன்களை எமது மக்களை நோக்கி விடுவிக்காமல், தங்களுக்கள்ளேயே தடுத்து வைத்தக் கொண்டிருப்பதிலும், மேலதிக நிதிகளை மத்திய அரசின் திறைசேரிக்கே திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதிலும் அக்கறை காட்டிக் கொண்டிருந்தால், மாகாண சபை முறைமையின் கீழ் எவ்விதமான பயனும் இல்லை என்றே எமது மக்கள் நம்புவார்கள்.
மாகாண சபை முறைமையானது ‘வெள்ளை யானை’ என ஒரு சாரார் கூறுகின்றனர். இவ்வாறு கூறப்படுகின்ற இந்த ‘வெள்ளை யானை’யிலிருந்து தான் எப்படி மக்களுக்குரிய பணிகளை மிகச் சிறந்த முறையில் ஆற்றினேன் என்பது பற்றி வடமேல் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த தற்போதைய புத்த சாசன அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மிக அற்புதமாக கூறியிருந்தார்.
ஆகவே இது ‘வெள்ளை யானையா?’ கறுப்பு யானையா?’ என்பது பார்ப்பவர்களது கண்களைப் பொறுத்தது. செயற்திறன் அற்றவர்களின் பார்வைக்கு இது ‘வெள்ளை யானை’யாகத் தெரியக்கூடும்.
மாகாண சபை முறைமையில் எதுவுமே இல்லை எனக் கூறிக் கொண்டு, தங்களுக்குரிய வாகனங்கள் முதற் கொண்டு அனைத்து சலுகைகளையும் மத்திய அரசிலிருந்து கேட்டுப் பெற்றுக் கொள்கின்ற மாகாண சபையின் ஆட்சியாளர்களால், மாகாண பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து, மக்களது பயன்பாட்டுக்காக அவற்றை வழங்குவதற்கு மத்திய அரசின் நிதி உதவிகளைப் பெற துறைசார்ந்த தொடர் அமைச்சுக்களை தொடர்பு கொள்ள முடியாது என்பது எமது மக்களின் துரதிர்ஸ்டமே அன்றி, வேறு ஒன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன் – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


