மலர்ந்தது தமிழர் ஆட்சி என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, December 3rd, 2016வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழை காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்தத் திட்டமானது எமது பகுதிகளினதோ, மக்களினதோ நலன் கருதி மேற்கொள்ளப்படுகின்ற திட்டமல்ல இது நிதி ஊழல் மோசடியை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற திட்டம் என்றும் தெரிய வருகிறது – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம்(03) 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
உரிய வகையில் அமைக்கப்பட்ட நாற்று மேடைகளில் இருந்து மரக் கன்றுகளைப் பெறாமல், ஆங்காங்கே பொது இடங்களில் முளைத்த மரக் கன்றுகளைப் பிடுங்கி, தங்களது தரகர்கள் ஊடாகப் பொதி செய்ய வைத்து, பருவ காலம் பார்க்காமல் நடும் செயற்பாடுகளே இங்கு காணப்படுகின்றது.
இதற்கு ஒரு உதாரணம், அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மர நடுகைத் திட்டமாகும். சுமார் 3 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் மூலமாக நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் அடுத்து வந்த மழையினால் அடித்துச் செல்லப்பட்டன.
‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டு, வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்கு வந்த இவர்கள் தொடர்ந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றார்களே தவிர, எமது மக்களின் தேவைகள் ஒருபோதும் அக்கறை செலுத்துவதாக இல்லை.
மாகாண சபைக்காக மத்திய அரசு ஒதுக்கிற நிதி பயன்படுத்தப்படாமல் திரும்கின்றதாகத் தெரிய வருகின்றது. மாகாண சபையினுடைய அரசியற் தலைமைகளினது வினைத்திறனற்ற, அக்கறையற்ற தன்மை காரணமாக இவ்நிதியினைச் செலவழிக்காது திரும்பித் திறைசேரிக்குப் போவதாகச் சொல்லப்படுகின்றது. அதேநேரத்தில், எஞ்சிய நிதியை வைப்பில் வைத்து அடுத்த வருடம் செலவழிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் வெளிப்படைத் தன்மையில்லை. எனவே, இந்த விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் தனது உடனடி அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
Related posts:
|
|