மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017

மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு மாகாண சபையை பொய்யான வாக்குறுதிகளால் எமது மக்களிடமிருந்து பறித்தெடுத்து ‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டவர்கள்;  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வெறும் வாய்ச் சத்தங்களால் போதித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி இதுவரையில் எதுவுமே செய்ததாக இல்லை – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்தகால யுத்தமானது எமது மக்களை பல்வேறு அழிவுகளுக்கு உட்படுத்தி பொருளதார ரீதியில் தலைதூக்க விடாத ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. எமது மக்கள் இந்த நிலையிலிருந்து தலைநிமிர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாரான போதிலும் அதற்கு அவகாசம் வழங்காதவாறு பல்வேறு தடைகள் – புறக்கணிப்புகள் – பாரபட்சங்கள் – முப்பது வருட கால யுத்தம் நடந்து முடிந்தும காட்டப்படுகின்ற பாகுபாடுகள் – சுரண்டல்கள் – வளங்களின் முடக்கங்கள் – மத்திய அரசிலும் தொடர்கின்றன, மாகாண அரசிலும் தொடர்கின்றன.

இயற்கையும்கூட எமது மக்களைத் தலைநிமிர விடாது தொடர்ந்தும் பாதித்துக் கொண்டே இருக்கின்றது.இத்தகையதொரு நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில், இந்த நாட்டில் வறுமைக்கு இன்று முகவரியாக இருக்கின்ற எமது மக்களுக்கு மாதாந்தம் மின் கட்டணப் பட்டியல் கிடைக்காத நிலையில் இப்படி மாதக் கணக்கில் வருடக் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு, ஒரே தடவையில் அந்தக் கட்டணங்களை அறிவிடுகின்றபோது, எமது மக்கள் அதற்கான நிதிக்கு எங்கே போவார்கள்? என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாத மின் கட்டணத்தையே செலுத்தவதற்கு பெரும் பாடு படுகின்ற எமது மக்களுக்கு இது ஒரு பாரிய தண்டனையாகவே அமைந்துவிட்டுள்ளது என்பதால் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-9 copy

Related posts:


புதிய ஆண்டில் நீர் வேளாண்மை தொடர்பில் அதிகளவிலான செயற் திட்டங்கள் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் ...
யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று - அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ட...