மர்ஹீம் அஸ்ரப்பின் கனவை நிறைவேற்றினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 28th, 2022

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பல வருடங்களுக்கு பின்னர் கடற்றொழிலாளர் பயன்பாடிற்காக கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகமானது,  துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சராக இருந்த  மறைந்த மர்ஹும் எம் எச் எம் அஷ்ரப் அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆரம்ப முயற்சிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

இத்துறைமுகத்தின் ஒரு பக்கம் வர்த்தக துறைமுகமாகவும் மறுபக்கம் மீன்பிடித் துறைமுகமாகவும் இரு பயன்பாடுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட

இந்த துறைமுகமானது, காலத்திற்கு காலம் கடலரிப்பு மற்றும் மணல் நிறைதல் போன்ற காலநிலை சவால்களை எதிர்கொண்ட போதும் அதை முறையாக பராமரிப்பதில் இருந்த குறைபாடுகள் காரணமாக, துறைமுகப்பகுதியில் மணல் நிறைந்து துறைமுக வாயில் மூடப்பட்டதால் பல வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இத்துறைமுகத்தை நம்பியிருந்த பலநாள் படகுத் தொழிலை செய்துவந்த கடற்றொழிலாளர்கள் காலநிலைக்கு ஏற்ப தமது படகுகளை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து பாதுகாக்கும் நிலையே இருந்து வந்தது. 

அதனால் பல்வேறு நடைமுறை சார்ந்த இடர்களையும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டனர்.  இந்த நிலையில் ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் ஆழப்படுத்தியும் அங்கு கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் செய்து, கடற்றொழிலை நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்க்கையை பாதுகாத்துத் தருமாறும், இத்துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்கு பெருமளவு வருமானத்தையும் ஈட்ட முடியும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் அமைச்சைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து அயராது எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக ஒலுவில் துறைமுகத்தின் வாயில் பகுதி தேவையான அளவு ஆழமாக்கப்பட்டு இன்று (28.07.2022) மீண்டும் கடற்றொழிலாளர் பாவனைக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை பெருங்கனவோடு திட்டமிட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்திற்கு “அஷ்ரப் ஞாபகாரத்த ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்” என்று புதிய பெயர் சூட்டப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து பல படகுகளை ஒலுவில் துறைமுகப்பகுதிலேயே தரித்து நிற்கச் செய்வதுடன் துறைமகப் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கட்டித் தொழிற்சாலை மற்றும் ரின்மீன் தொழிற்சாலை என்பன மீளவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் படகு திருத்தப்பணிகளை மேற்கொள்ளவும், படகு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் ஒலுவில் பலநாள் மற்றும் ஒருநாள் படகு உரிமையாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

000

Related posts:


மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? - நாடாளுமன்றில் செயலா...
எதிர்காலத்தில் சரியானவர்களை தெரிவு செய்வதன் மூலம் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் முன்வரவ...