மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2019

கடந்த கால யுத்த சூழலை முன்வைத்து இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்கனவே யாழ் செம்மணி புதைகுழி தொடர்பிலான உண்மைகளை வெளிக் கொண்டு வந்து, அதில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனைகளுக்கு உட்படுத்த நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம். இன்று, மன்னார் கூட்டு மனித புதைகுழி தொடர்பிலும் தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.    

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற 6 எலும்புக்கூடு மாதிரிகள் அமெரிக்க பீட்டா எனெல்டிக்கா இரசாயனகூடத்தில் காபன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இவை 1499 முதல் 1719ஆம் ஆண்டு வரையிலான காலத்தையுடையவை எனத் தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

மேற்படி அகழ்வுப் பணிகள் ஒழுங்குற முடிவுறுவதற்கு முன்பாக மேற்படி எலும்புக்கூடுகளின் மாதிரிகளை காபன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதாகவே பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

பொதுவாக காலத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்காக மாதிரிகளை அனுப்புவதானது அகழ்வுப் பணிகள் முடிவுற்றதன் பின்னரே இடம்பெறும் என இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்கள் இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இத்தகையதொரு அகழ்வினது முழுமையான பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையிலான பல்வேறு அறிக்கைகள் தயாரிக்கின்ற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்திருந்தது.

இந்த நிலையில் மேற்படி அகழ்வுப் பணிகளின் பிரதான ஆய்வு அதிகாரியாக பணியாற்றுகின்றவர் அவசரமாக காபன் பரிசோதனை ஊடான கால நிர்ணயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தூண்டப்பட்டது ஏன்? இவரைத் தூண்டியவர் யார்? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இல்லை, அவர் சுயமாகவே தீர்மானம் எடுத்திருந்தால், அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது. அத்துடன் இச் செயற்பாடானது அங்கு இடம்பெற்றுள்ள தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகளின் பிரகாரம் தவறான தீர்மானம் என்றும் கூறப்படுகின்றது.

மேற்படி மன்னார் கூட்டு மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குத் தேவையான அடிப்படை நிதியுதவிகளை வழங்குவதற்கு காணாமற் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஏற்கனவே முன்வந்திருந்தது. அதன் பின்னர் மேற்படி ஆய்வு அதிகாரியை அழைத்துக் கொண்டு இந்த காணாமற்போனோர் தொடர்பான அலுவலக உறுப்பினர்கள் சிலர் சைபிரஸ் நாட்டுக்கு ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பயணமானது சைபிரஸ் நாட்டின் கூட்டு மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான ஆய்வுக்கானது எனவும் கூறப்பட்டது.

அகழ்வுப் பணிகளுக்கு அனுசரணை வழங்குகின்ற ஒரு தரப்பினருடன்,  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற இடைநடுவில், அந்த அகழ்வுப் பணிகளின் ஆய்வுக்குப்  பொறுப்பான பிரதான அதிகாரியொருவர் சுற்றுப் பயணங்களில் ஈடுபடுவதானது ஒழுங்குவிதிகளுக்கு முரணான விடயமாகும் என்றே பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்துடன் அந்த அதிகாரியின் நேர்மை குறித்தும் இதன் காரணமாக கேள்விகள் எழுகின்றன.

அதேநேரம், மேற்படி அவசர காபன் பரிசோதனைக்கு காணாமற் போனோர் தொடர்பிலான அலுவலகத்திலுள்ள ஓர் அதிகாரியின் தலையீடே காரணம் என்றும் ஊடகங்கள் தற்போது தெரிவித்து வருகின்றன.

அதே நேரம், இதற்கு முன்பாக, அதாவது இந்த காபன் அறிக்கை வெளிவருவதற்கு முன்பதாக, இந்த அறிக்கையில் அதிர்ச்சித் தரக்கூடிய விடயங்கள் வெளிவரும் என .  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்கூட்டியே தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்த அறிக்கை வெளிவரும் முன் அந்த உறுப்பினர் அவ்வாறு கூறியதன் உள் அர்த்தம் என்ன? என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

அந்தவகையில், எமது மக்களின் உணர்வுகளை, எமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை, எமது மக்கள் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய  தேவைகளை, எமது மக்கள் பெற வேண்டிய உரிமைகளை இந்தத் தமிழ்த் தரப்பினரே அரசுடன் இணைந்து இருந்து கொண்டு தடுத்தும், திசை திருப்பியும் வருகின்றனர் என்பது இத்தகைய இவர்களது செயற்பாடுகளால் அம்பலமாகின்றது. ‘இந்த அரசு எங்களிடம் கேட்டுத்தான் அனைத்தையும் செய்யும்’ என இந்தத் தமிழ்த் தரப்பினர் கூறுகின்ற கூற்றுகளிலும் அது உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த அரசு எமது மக்கள் நலன் கருதி எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு வழிவிடாத வகையிலேயே இந்தத் தமிழ்த் தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், எமது மக்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்க வேண்டுமானால், இத்தகைய எமது மக்களுக்கு விரோதமான தமிழ்த் தரப்புகள் இந்த அரசுடன் இணங்கிச் செயற்பட்டு வருகின்ற காலம் வரையில் அது சாத்தியமாகாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்ததாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இந்து கோவில்கள் தொடர்பில்  மற்றும் அவை சார்ந்த சுற்றுச் சூழல்கள் தொடர்பில் தொல்பொருள் திணைக்கள ரீதியிலான பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. இது தொடர்பில் அண்மையில் நான் இந்தச் சபையில் தெரிவித்திருந்த நிலையில், இவ்விடயம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவித்திருந்தார். அந்தவகையில் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும் இந்த விடயம் தொடர்பில் அவதானங்களை செலுத்தி இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

Related posts:

எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா?...
வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...