மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, April 8th, 2022

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ  இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக     அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எமது நிலை உணர்ந்து நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்ற இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்திருந்த கௌரவ டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“எமது நாடு, பொருளாதார ரீதியில் ஓர் இக்கட்டான நிலையை எட்டியிருக்கின்ற வேளையில், அதற்கெதிரான மக்களது கோப வெளிப்பாடுகள் ஆர்ப்பட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் சிலரின் திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களாக மாறி, வன்முறைகளாக உருவெடுத்த சம்பவங்களையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

எமது பகுதிகளைப் பொறுத்த வரையில், பெரும்பான்மையாக தென் இலங்கையிலிருந்து சென்றவர்களினாலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் என இவற்றை வகைப்படுத்த முற்பட்டாலும், அரசியல் பின்பலம் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் அதிகளவில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இத்தகைய போராட்டங்கள், பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருகின்ற ஒரு வழிமுறையாக இருக்கின்ற போதிலும், நிலவுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இவற்றில் எதிர்பார்க்க முடியாது என்ற யதார்த்தத்தினையும் இப் போராட்டங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன.

அதே போன்று இப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைக்கின்ற எதிர்தரப்பு அரசியல்வாதிகளும், தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு, முடிந்தவரை ஆளுக்காள் திட்டித் தீர்ப்பதில் அக்கறை காட்டுகின்றனரே அன்றி, இப் பிரச்சினைகளுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வினை முன்வைப்பதாக இல்லை.

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கே அனைவரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நான் ஏற்கனவே கூறி வருவதைப் போன்று இது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல.

உங்களுக்குத் தெரியும், இந்த நாடு ஒரு காலத்தில் சிங்கப்பூருக்கு முன்னுதாரணமாக பொருளாதார ஸ்திரத் தன்மை கொண்டதாக இருந்தது. பல்வேறு இலவச, நிவாரணத் திட்டங்களையும் செயற்படுத்தி வந்திருந்தது.

1977ஆம் ஆண்டில் ஜக்கியத் தேசியக் கட்சிக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையானது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தோற்றுவித்ததுடன், திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி, அதனை செயற்படுத்தியது.

இதன் பிற்பட்ட காலங்களில் எமது நாட்டின் தேசிய உற்பத்திப் பொருளாதாரமானது அழிந்தொழிந்து போயின.

சினிமாப் படம் ஒன்றில் இடம்பெற்ற பாடல் வரிகள் எனக்கு தற்போது நினைவிற்கு வருகின்றது. அதில், ‘இறுதியில் நாம் தூங்குகின்ற பாயும் இப்போது வெளிநாடுகளிலிருந்தே வருகின்றன’ என்ற வரிகள் காணப்படுகின்றன. அந்த நிலைக்கு எமது நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர்.

தரகு முதலாளித்துவ நிலையிலான பொருளாதாரக் கொள்கை தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் அதிலிருந்து மீள முடியாதவாறு செயற்படுத்தப்பட்டு வந்ததன் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது ஏற்பட்டிருப்பது அதன் இறுதி வடிவமல்ல. இப்படியே தொடர்ந்தால் அதன் இறுதி வடிவம் மிக அண்மையிலேயே ஏற்பட வாய்ப்புண்டு.

மக்கள் தங்களது பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை சாத்வீகப் போராட்டங்களாக முன்னெடுப்பதை தவறென்று கூற முடியாது. மக்கள் தங்களது பிரச்சினைகளை பொது வெளிக்குக் கொண்டு வருகிறார்கள். இனி, அதற்கான தீர்வை நாம் முன்னெடுக்க வேண்டும்.

அண்மைக்காலமாக எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற தேவைகள் தடைப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளை கைத்தொழிற்துறைகளும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன.

கோவிட் 19 கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையானது மெல்ல மெல்ல தலைதூக்கி வந்த வேளையில், அண்மைக் காலப் போராட்டங்கள் அதனையும் பாதிக்கச் செய்துள்ளது.

தற்போது இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

இதில், குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நோக்கி எமது அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தே வந்திருக்கிறது.

கோவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் எமது நாட்டின் பொருளாதார நிலை வலுவாக இல்லாத நிலையிலும், உலகளாவிய ரீதியில் அதன் சவாலை முறியடிப்பதற்கு எம்மால் முடிந்திருந்தது. இதற்கு எமது அரசாங்கத்தின் வினைத்திறன்மிக்க விரைந்த செயற்பாடுகளே காரணமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், தேசிய உற்பத்தி பொருளாதாரத்தின் மீதான அரசின் முன்னோக்கிய செயற்பாடுகள், விசமற்ற பசுமைப் புரட்சி விவசாய செய்கைகள் என்பன எமது நாட்டின் எதிர்கால சந்ததிகள் சார்ந்த சிறந்த முன்னெடுப்புகளாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியானது 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது.

கடற்றொழில் அமைச்சைப் பொறுத்தவரையில். கடந்த ஆண்டு மீனின உற்பத்தியில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களும், படகுகள் உற்பத்தியில் 37.81 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஏற்றுமதி வருமானமாகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

பொருளாதார ரீதியில் இத்தகையதொரு சாதகமான நிலை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே இன்றைய நெருக்கடி நிலைமை உருவெடுத்திருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்ற தட்டுப்பாட்டு விடயங்களாக இருக்கின்றன. தற்போது மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை இன்னும், இன்னும் தட்டுப்பாடுகள் வரலாம்.

எனவே, விரைந்த தீர்மானத்துக்கு நாங்கள் வரவேண்டும். விரைந்த தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியுமே தவிர, அதை எதிர்த்துக் கொண்டல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும், மாற்று வழிகள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவதே சந்தப்பத்திற்கேற்ற செயற்பாடாகும் எனக் கருதுகின்றேன்.

அந்த வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைப் பார்க்கின்றபோது, ஒரு சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் தொடர்பில் நாங்கள் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

நாங்கள் கேட்கின்ற கடனுக்கான பரிந்துரைகளாக அல்லாத, சாதாரண அறிக்கையாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.

உணர்ச்சிகளாலோ, அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளாளோ இதனை தீர்மானிக்க இயலாது. அறிவு ரீதியாகவே தீர்மானிக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமையை உடனடியாக நாம் மாற்றியாக வேண்டும்.

பொது மக்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்து அரசியல் செய்வதென்பது எமது நாட்டில் இன்று நேற்று வந்த கலாசாரமல்ல என்பதால், நாம் விரைந்த மக்கள் நலக் கவனிப்புகளை முன்னெடுக்க வேண்டியிவர்களாக இருக்கின்றோம்.

மேலும், இத்தகைய பிரச்சினைகள் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல. இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் எரிபொருளின் விலைகள் 12 தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியா இலங்கையைவிட மிக அதிகமான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம் குறித்து பலருக்கும் பல்வேறு பார்வைகள் உண்டு, எமக்கென்றும் ஒரு பார்வை உண்டு. ஆனாலும், இது தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் தருணமல்ல. இன்றைய இடர்கால சூழலில் இருந்து இலங்கைதீவில் வாழும் சகல மக்களினதும் வாழ்வியல் மீட்சி குறித்து நடைமுறை சார்ந்து செயலாற்ற வேண்டிய தருணம். தேசிய பொருளாதார உற்பத்தி திட்டங்களை கடந்து போன ஆட்சிகளில் இருந்து சரிவர முன்னெடுத்திருந்தால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது.

இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமதாசா புலிகள் பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீர்வுத் திட்டம், ரணில் புலிகள் ஒஸ்லோ ஒப்பந்தம், மஹிந்த ராஜபக்ச புலிகள் பேச்சுவார்த்தை, இத்தகைய அரிய வாய்ப்புகளை சக தமிழர் தரப்பு சரிவர கையாண்டிருந்தால், அழிவு யுத்தம் அன்றைக்கே முடிவிற்கு வந்திருக்கும். யுத்தத்திற்காக அரசு பட்ட கடன்களே இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த சபையில் ஒரு பக்க உண்மையை ஒப்புக்கொண்டுள்ளர். அந்த அழிவு யுத்தத்தை அவர்களே தமது சுயலாபங்களுக்காக தூண்டி விட்டார்கள். இன்று அவர்களே யுத்தத்திற்காக அரசு கடன்பட்ட காரணங்களே, இன்று சூழ்ந்திருப்பதாக கூச்சலிடுகின்றனர்.

அழிவு யுத்தத்தை சக தமிழ் தலைமைகள் தூண்டி விட்டதன் காரணங்கள் வேறொன்றும் இல்லை. புலிகளின் தலைமை அழிய வேண்டும், தமது அரசியல் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அழிவுகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும். இவைகளேயாகும்

இத்தகைய இரட்டை வேட நாடக நடிப்பில் இறங்கியிருப்போரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இன்று வீதியில் இறங்கியிருக்கும் ஒரு பகுதி சிங்கள மக்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள். அன்று அப்பாவி சிங்கள மக்களே தமிழ் தேசிய இனத்தின் பெயரால் குறி வைத்து கொல்லப்படும் போது அதற்கு எதிராக ஒரு கண்டனமாவாது தெரிவித்தீர்களா?.. இல்லை.

எமது நீதியான உரிமைப்போராட்ட காலம் தொட்டே நாம் சாதாரண சிங்கள மக்களையும் நேசித்து வந்தவர்கள். தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து வந்தது போல் அப்பாவி சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளையும் கண்டித்து வந்திருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் அழிவுகளில் இருந்து தமிழ் மக்கள் தப்பித்து வந்த போது, அவர்களுக்கு நாங்கள் நிவாரணம் சேகரித்த போது, அள்ளி வழங்கியவர்கள் சிங்கள மக்கள். காலம் கடந்தாவது சிங்கள சகோதர மக்களிடம் நேசக்கரம் நீட்டும் நீசர்கள், எமது நீதியான உரிமைப் போராட்டத்தின் போதும் எம்மைப்போல் சிங்கள சகோதர மக்களிடம் நேசக்கரம் நீட்டியிருந்தால் தமிழ் பேசும் மக்கள் உரிமை பெற்று நிமிர்ந்தெழுந்திருப்பார்கள். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வின் திறவுகோல் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் ஒற்றுமையிலேயே உண்டு. அரசுடனான தேசிய நல்லிணக்க உறவுவினாலேயே உண்டு. சகல மக்களினதும் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.

தீராப்பிரச்சினையாக இருக்க வேண்டும் என்போருக்கும் தீர வேண்டிய பிரச்சினை என தீர்க்க வேண்டும் என்போருக்கும் இடையிலான முரண்பாடுகளே இன்று வன்முறை வடிவங்களாகவும் உருவாகியிருக்கின்றன.

கோட்டா வந்தால் வெள்ளை வான் ஓடும், முதலைக்கு வெட்டி போடுவார் என்று அச்சம் ஊட்டினார்கள்,. ஆனால் இன்று சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு பகுதி மக்கள் வீதியில் இறங்கி போராடும் ஜனநாயாக சுதந்திரம் உண்டென்ற நிலையையே காணமுடிகிறது.

இதுபோன்ற மக்கள் போராட்டங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் அசுர பலம் கொண்டு நசுக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் எமது இலங்கை தீவில் போராடுவதற்கான சுதந்திரம் உண்டென்பது மெய்ப்பிக்கப்படிருக்கிறது.

ஆகவே,.. அரசியல் கண்ணாடிகளை கழற்றி எறிந்து விட்டு நிஜக்கண்களால் காட்சிகளை பார்ப்போம் வாருங்கள்.

இன மத பேத கட்சி முரண்பாடுகளை தவிர்த்து விட்டு இடர் காலத்தை எதிர் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவோம்  வாருங்கள்.

தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களே ஒன்று பட்டு உழைப்போம் வாருங்கள். பொருதார நெருக்கடிகளில் இருந்து எமது தாய் மண்ணை மீட்டெடுப்போம். சகல மக்ககளும் சரி நிகர் சமன் என்ற நீதியை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்

000

Related posts: