மக்களின் இழப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சவப்பெட்டி அரசியல்வாதிகளும் பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, July 26th, 2019

கையாலாகாதவர்களே அடுத்தவன் பெயரை கைத்தடியாக பயன்படுத்துவார்கள். அது போலவே இன்று இந்த தமிழ்த் தரகு அரசியல் கட்சிகள் அடிக்கடி புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரித்து வருகிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பிரபாகரன்  உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள். அது உண்மையோ, இல்லையோ, ஆனால் ஒன்று மட்டும் உண்மை. புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தித் தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது.

பெட்டிப்பாம்பாக நீங்கள் அடங்கியிருப்பீர்கள். தமிழ் மக்களின் வாக்குப்பலத்தைத் தாரை வார்த்துக்கொடுத்துப் பணப்பெட்டிகளை மட்டும் பரிமாறும் உங்கள் சோரம் போகும் அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது..

அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி எனக் காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்@ர மகிழ்ந்தீர்களா இல்லையா?.. இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா?..

அதைவிடவும்,. புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனித நாகரீகப் பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்… புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள்கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.

நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களைக் காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன். நீங்கள் வரவில்லை. எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுயலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன்கூட இன்று உயிருடன் இருந்திருப்பார். முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளைத் துறந்து எதிர்ப்பைத் தெரிவித்தீர்களா?.. இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியைத் துறந்திருப்பேன். ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்… சவப்பெட்டி அரசியல் வாதிகளும்., பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

Related posts:


யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வ...
பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் - மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர...