மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகாண்போம் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, January 10th, 2018
எமது மக்கள் நாளாந்தம் பிரச்சினை முதற்கொண்டு அரசியல் உரிமைப்பிரச்சினைவரை தீர்க்கப்படாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இற்றைவரை முகங்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில்தான் எமது மக்களின் அன்றாடப்பிரச்சினை அபிவிருத்தி அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது போன்ற கொள்கைகளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்வைத்து கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் இன்றையதினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் எமது கட்சியின் ஆளுகைக்குள்ளிருந்த ஊர்காவற்றுறை வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபைகளினூடாக மக்கள் நலன்சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுத்திருந்ததை இங்கு வாழும் மக்கள் நன்கறிந்துகொள்வார்கள்.
பிரதேச சபைகளினூடாக செலவு செய்யப்படும் விதிகளுக்கு அப்பால் எமது இணக்க அரசியலினூடாக அரசிடமிருந்து விஷேட நிதிகளை பெற்றுக்கொண்டு மேலும் பல அபிவிருத்தி செயற்றிட்டங்களை கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்து சாதித்துக் காட்டியுள்ளோம்.
இருந்தபோதிலும் மேலும் பல அபிவிருத்திகள் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டியதன் தேவைப்பாட்டையும் நாம் நன்கறிவோம்.
எனவே நாம் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் முழுமைப்படுத்துவதற்கும் தீவக மக்கள் தமது ஆதரவுப்பலத்தை எமக்குத் தரவேண்டும்.
நாம் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் மக்களுடன் இருந்து மக்கள் பணிகளை முன்னெடுத்து செய்த செயற்றிட்டங்கள் யாவும் குன்றின்மேல் ஏற்றிய தீபம் போன்று துல்லியமாகத் தெரிகின்றது. நீங்கள் எமக்கு வாக்களித்து இம்முறையும் வெற்றியடையச் செய்யும் பட்சத்தில் கடந்தகாலங்களை காட்டிலும் இம்முறை மேலும் அதிகமான பணிகளை இங்கு செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
அந்தவகையில் மக்களின் அபிலாஷைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையிலான எமது கொள்கைகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவை நல்கி எமது கட்சியின் வீணைச்சின்னத்தை வெற்றிகொள்ளவைக்கம் பட்சத்தில் மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் உரிய தீர்வைக்கண்டுதர நாம் தயாராக உள்ளோம் என்றார்.

Related posts:
|
|
|


