மக்களது வாழ்வியலுக்கு கேடுவிளைவிக்க அனுமதிக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா!
Sunday, October 2nd, 2016மனித வாழ்வியலுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் எவ்விதமான செயற்பாடுகளுக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலம் பகுதிக்கு இன்றைய தினம் (02) திடீர் விஜயம் மேற்கொண்டு அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நாம் எமது மக்கள் நலன்சார்ந்த பல்வேறு விடயங்களில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தியுள்ளோம். இவ்வாறான எமது செயற்றிட்டங்களின் போது மக்களின் வாழ்வியலுக்கோ அல்லது கலை கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கோ சுகாதாரம் போன்ற இதர விடயங்களில் உரிய கவனம் செலுத்தி அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாகவும் முன்னெடுத்துள்ளோம்.
அதிலும் குறிப்பாக எமது மக்கள் தாம் சார்ந்து வாழும் சமூகத்தில் எவ்விதமான இடையூறுகளுக்கும் தடைகளுக்கும் முகம்கொடுக்காது அவற்றைத்தாண்டி ஒரு நிலையான அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என்பதிலேயே நாம் மிகுந்த கரிசனை கொண்டிருந்தோம்.
இந்தப் பகுதியிலுள்ள மக்கள் வாழ்விடங்களுக்கு மத்தியிலுள்ள பிள்ளையான்காடு இந்து மயானத்தில் உடலங்கள் தகனம் செய்யப்படும் போது அதனால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகளையும் சுகாதாரச் சீர்கேடுகளையும் இப்பகுதி வாழ் மக்கள் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அதேவேளை இம்மயானத்தில் எதிர்காலங்களில் உடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
மனித குடியிருப்புகளில் இருந்து நல்லடக்கம் செய்யப்படும் மயானமாக இருந்தாலும்சரி எரியூட்டப்படும் மயானமாக இருந்தாலும்சரி எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பதில் ஒரு வரையறை இருக்கின்ற போதிலும் இங்கு அவ்வாறானதொரு நிலை இல்லாமல் இருக்கின்றமை மிகுந்த கவலையளிக்கின்றது.
இங்குவாழும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மயானத்தில் உடலம் எரியூட்டப்படும் போது அதிலிருந்து வெளிக்கிளம்பும் புகையினால் ஏற்படக் கூடிய பல்வேறு அசௌகரியங்களையும் பாதிப்புகளையும் நான் நன்கறிவேன்.
எனவே இது விடயம் தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்க முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.இதனிடையே குறித்த மயனத்தையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதில் உடுவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான அரிகரன் உடனிருந்தார்.
Related posts:
|
|