போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Friday, July 6th, 2018எமது மக்களது துரதிர்ஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல் வெறும் பதவிகளுக்கான சபையாக மாறிவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தல் முறைகள் பற்றிய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது நீண்ட கால அர்ப்பணிப்புடன் கூடிய போராட்டத்தின் பயனாக எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையினை நாம் ஒரு பொன்னான வாய்;ப்பாகவே கருதி வருகின்றோம்.
இந்த அரசு ஆட்சிப்பீடமேறிய காலந்தொட்டு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் கூறப்பட்டு வந்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது எந்தளவிற்குச் சாத்தியமானது என்பது தொடர்பில் சந்தேகங்களே நிலவுகின்ற நிலையில், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக அதாவது, 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். தொடர்ந்தும் மேலும் பெறவேண்டிய அதிகாரங்களை அதாவது இரண்டாவது சபை, மேலதிக விஷேட அதிகாரங்கள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இருப்பினும், இன்று வடக்கு மாகாண சபையை எடுத்துக் கொண்டால் செயற்திறன் இன்மையினால், அதன் மூலமான பலன்கள் எமது மக்களுக்குக் கிட்டாமல் உள்ளது. தற்போது வடக்கு மாகாண சபையின் ஆட்சி நிர்வாகத்தினை மேற்கொண்டு வருகின்ற பிரதான கட்சியினரே “வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தெரிவானது தவறானது” எனக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
நாம் வடக்கு மாகாண சபையின் ஆட்சியினைக் கைப்பற்றியிருந்தால், வடக்கு மாகாணத்தில் தேனும், பாலும் ஓட வைத்திருப்போம். எனினும், எமது மக்களது துரதிஸ்டம் காரணமாக வடக்கு மாகாண சபையானது எமது மக்களுக்கு எவ்விதமான பலனையும் பெற்றுக் கொடுக்காமல், வெறும் பதவிகளுக்கான சபையாகவே மாறிவிட்டுள்ளது.
இன்று வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் வன்முறைச் செயற்பாடுகள் அதிகரித்தே வருகின்றன. அண்மையில் சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் கொல்லப்பட்ட சம்பவம் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
நேற்றைக்கு முன் தினம் அராலி பகுதியில் வயோதிபப் பெண்னொருவர் கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொள்ளைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று நேற்றைக்கு முன்தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாள் வெட்டுக் கும்பல்களின் அட்டகாசங்கள் என வடக்கு மாகாணம் – குறிப்பாக யாழ்ப்பாணம் தொடர்ந்தும் பதற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.
எனவே, வடக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டு வருகின்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சமூகச் சீர்கேடுகளை உடனடியாக நிறுத்தி, இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளின்போது, சட்டம், ஒழுங்கினைப் பேணுகின்றபோது மிகுந்த அவதானத்துடனான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கினைப் பேணுவதற்காக எனக் கூறப்பட்டு, மேற்படி செயற்பாடுகளில் இறங்கியவர்களால் அதற்கு மாற்றமான விளைவுகளே அங்கு தோற்றுவிக்கப்பட்டு, நீண்ட கால மோதல் நிலைமை ஏற்பட்டிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
Related posts:
|
|