பொருளாதார வளம்மிகு பிரதேசமாக தீவகம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Sunday, May 23rd, 2021தீவக பிரதேசங்களில் கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளி முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், சிறுத்தீவை அண்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணையாளர்களுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கு அமைய கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, சிறுதீவுப் பகுதிக்கான மின்சார இணைப்பை பெற்றுக் கொள்ளுல் மற்றும் மரத் தடிகளுக்கு மாற்றீடாக நீண்ட காலத்துதிற்கு பயன்படுத்தக் கூடிய மாற்று ஏற்பாடுகளை உபயோகித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – மக்கள் அதிகளவான அரசியல் பலத்தை எமக்கு தராத போதிலும் கிடைக்கப்பெற்ற இந்த அமைச்சின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை செழிப்புமிக்கதாக உருவாக்க வேண்டும் என்பது தனது கொள்கையாக உள்ளது.
அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்கைதரத்தினையும் உயர்த்துவதை நோக்கியதாகவே தன்னுடைய உழைப்பு இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார். அதேநேரம் யாழ்ப்பாணம் சிறுத்தீவை அண்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நவீன தொழில் நுட்ப முறையிலான பாரிய கடலட்டை பண்ணையைப் போன்று தீவகத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, தம்பாட்டி ஆகிய பிரதேசங்களிலும் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம், தீவகத்தை ஒரு செழிப்புமிக்க பிரதேசமாக மாற்ற வேண்டும் என்பதுவே தனது குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|