பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை!
Wednesday, March 27th, 2019வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 36 ஆயிரத்து 334 குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்திலே 8 ஆயிரத்து 435 குடும்பங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலே 5 ஆயிரத்து 961 குடும்பங்கள், வவுனியா மாவட்டத்திலே 6 ஆயிரத்து 712 குடும்பங்கள், மன்னார் மாவட்டத்திலே 5 ஆயிரத்து 903 குடும்பங்கள் என 63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வாழ்கின்றன.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் சுமார் 40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பெண்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்குக் குறைந்தவர்களாகவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 23 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இத்தகைய பெண் தலைமைகளைக் கொண்ட குடும்பங்களின் பொருளாதார நிலை என்பது மிகவும்; பாதகமான நிலையில் இருக்கின்ற அதே சமயம், இவர்கள் எதிர்கொள்கின்ற சமூகப் பிரச்சினைகளும் பாரியவை என்றே குறிப்பிடல் வேண்டும்.
அதே நேரம் முன்னாள் இயக்க உறுப்பினர்களாகிய பெண்கள் பலரும் சமூக, பொருளாதார நிலைமைகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பெண்களது பிரச்சினைகள் என்பது இந்த நாட்டு பெண்கள் சமூகங்கத்தில் காணப்படுகின்ற பொதுவான பிரச்சினைகளில் நின்றும் வேறுபட்டவையாகவே இருக்கின்றன.
எனவே, இத்தகையப் பெண்களது நிலைமைகளை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு, தயாரிக்கப்படுகின்ற பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களே அவசியமாகின்றன என்பதால், அத்தகைய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|