பெண்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்!
Tuesday, October 10th, 2017
கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். இருப்பினும் பெண்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை இன்னும் அதிகரித்து சமத்துவ நிலைக்கு கொண்டுவருவதோடு, இளைஞர், யுவதிகளுக்கு பிரதிநிதித்துவத்தின் வரம்பு துல்லியமாக சுட்டிக்காட்டப்படவில்லை என்பதையும், இளைஞர், யுவதிகளுக்கான தோதான விகிதாசார எண்ணிக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இன்று (09.10.2017) நாடாளுமன்றத்தில் மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,பெண்களைப்போல் இளைஞர்களும் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும்போதே ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் பலமடையும். அதுவே நாட்டின் சுபீட்சத்திற்கும், அர்த்தமுள்ள அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமையும்.
இவ்வேளையில் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள புதிய சபைகளை உருவாக்கியும், அவசியமான நகரசபைகளையும், பிரதேச சபைகளையும், தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக எமது மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில்,வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரிய பகுதிகளாக இருக்கும் பிரதேசங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அவற்றை புதிய உள்ளுராட்சி மன்றங்களாக உருவாக்கித்தரவும் அமைச்சர் அவர்கள் நடலடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


