பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் – டக்ளஸ் M.P.வலியுறுத்து!

Saturday, November 18th, 2017

அண்மைக்காலமாக பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற குளறுபடிகள் மீள ஏற்படாத வகையிலான உறுதியான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், ஆசிரியர்களுக்கான ஊதிய  மட்டங்களை அதிகரிப்பது தொடர்பிலும் இந்த ஆணைக்குழு அக்கறைகாட்ட வேண்டும் –  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தற்போது செயற்பாட்டில் உள்ள நிலையில், இது தொடர்பிலான சரியான அறிவுகள் பொதுவாக சாதாரண மக்களிடையே காணப்படாத ஒரு நிலை தென்படுகின்றது. எனவே, இந்த ஆணைக்குழு பற்றிய விழிப்புணர்வுகளை பொது மக்கள் மத்தியில் பரவலாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவின் கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ள முடியும். அங்கு அரசு மேற்கொள்கின்ற அனைத்துப் பணிகள் தொடர்பிலான நிதி முதற்கொண்டு அனைத்து விபரங்களும் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஏற்பாடுகள் மிக சிறந்த முறையில் செயற்படுத்தப்படுவதன் காரணமாக ஊழல், மோசடிகள் அற்றதொரு ஆட்சி நிர்வாகத்தினையும், முன்னேற்றகரமான அபிவிருத்தியையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில், சுயாதீன ஆணைக்குழுக்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் செயற்திறன் மிக்கவையாக செயற்றப்பட வேண்டும். அதுவே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்குப் போதுமான அதிகாரங்களையும், வளங்களையும், வளவாளர்களையும் வழங்க அரசு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மேற்படி ஆணைக்குழுக்களினால் உரிய பயன்கள் எட்டப்போவதில்லை. எனவே, இது தொடர்பில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், ஜனாதிபதி அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது அதன் நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புவதுடன், பிரதமர் அலுவலகமானது வடக்கு – கிழக்கு மற்றும் மலையக மக்களது பிரச்சினைகளுடன் அன்றாடம் கலந்துரையாடுகின்ற வகையிலானதொரு ஒருங்கிணைப்பிற்கு ஏதுவான ஏற்பாடுகளை வலுவுள்ளதாகக் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்து விடைபெறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

003

Related posts:

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் - நா...
இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய ...
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ...