தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி அரசு -கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!
Thursday, December 26th, 2019தரமற்ற பகுதியில் குடியிருப்பையும் அமைத்துத் தந்து குப்பைகளையும் எமது பகுதிக்குள் குவித்து நம்மை நிரந்தர நோயாளர்களாக்கி நிம்மதியற்ற வாழ்வியல் நிலைக்குள் தள்ளிவிட்டது நல்லாட்சி அரசு என கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்ட மக்கள் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்று தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்து கொண்டார். இதன் போதே குறித்த பகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்-
வீடுகள் அற்றவர்களாக இருந்த எமக்கு வீடுகள் அமைத்து தருவதாக கூறி வாழ்வியல் சூழலுக்கு தரமற்ற இப்பகுதியில் வீடுகள் அமைத்து தரப்பட்டுள்ளது.
ஆனாலும் இப்பகுதி மிகவும் தாழ் நிலப்பகுதியாக இருப்பதனால் தற்போதைய மழை காரணமாக நாளாந்தம் இன்னோரன்ன இன்னல்களை நாம் சந்தித்து வருகின்றோம்.
வீடுகள் அமைத்து தரப்பட்ட போதும் குடியிருப்புக்கென ஒரு பொதுவான வீதி அமைத்து தரப்படவில்லை.
அதுமட்டுமன்றி யாழ் மாநகர சபை பிரதேசம் எங்கும் சேகரில்கப்படும் அனைத்துவிதமான திண்மக் கழிவுகளும் எமது குடியிருப்புக்கு அருகில் கொட்டப்படுகின்றது. இதனால் தற்போது எமது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோய்களும் பரவிவருகின்றது.
அத்துடன் வீடுகளுக்கு அருகாமையில் ஒரு மயானமும் அமைந்துள்ளது. இதுவும் எமக்கு சுகாதாரமற்ற சூழ்னிலையை தோற்றுவித்துள்ளது என கவலையுடன் தெரிவித்த மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பும் இங்கு இல்லை எனவும் இதனால் தாம் நாளாந்தம் அச்சத்துடன் இரவுப் பொழுதை கழிப்பதாகவும் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரியிருந்தனர்
மக்களது அவலங்கள் தொடர்பில் அவதானித்து கேட்டறிந்துகொண்ட அமைச்சர் காலக்கிரமத்தில் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|