தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Saturday, April 9th, 2022நாட்டில் காணப்படும் தரகு முதலாளித்துவ நிலையிலான பொருளாதாரக் கொள்கையானது தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களால் அதிலிருந்து மீள முடியாதவாறு செயற்படுத்தப்பட்டு வந்ததன் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டிருப்பது அதன் இறுதி வடிவமல்ல. இப்படியே தொடர்ந்தால் அதன் இறுதி வடிவம் மிக அண்மையிலேயே ஏற்பட வாய்ப்புண்டு என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரடர்ந்தும் கருத்து கூறுகையில் –
மக்கள் தங்களது பிரச்சினைகளின் வெளிப்பாடுகளை சாத்வீகப் போராட்டங்களாக முன்னெடுப்பதை தவறென்று கூற முடியாது. மக்கள் தங்களது பிரச்சினைகளை பொது வெளிக்குக் கொண்டு வருகிறார்கள். இனி, அதற்கான தீர்வை நாம் முன்னெடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற தேவைகள் தடைப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளை கைத்தொழிற்துறைகளும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன.
கோவிட் 19 கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையானது மெல்ல மெல்ல தலைதூக்கி வந்த வேளையில், அண்மைக் காலப் போராட்டங்கள் அதனையும் பாதிக்கச் செய்துள்ளது.
தற்போது இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நோக்கி எமது அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தே வந்திருக்கிறது.
கோவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் எமது நாட்டின் பொருளாதார நிலை வலுவாக இல்லாத நிலையிலும், உலகளாவிய ரீதியில் அதன் சவாலை முறியடிப்பதற்கு எம்மால் முடிந்திருந்தது. இதற்கு எமது அரசாங்கத்தின் வினைத்திறன்மிக்க விரைந்த செயற்பாடுகளே காரணமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
|
|