தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே – டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2019

ஸ்திரமற்ற நிலையிலான அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதானது இந்த நாட்டு மக்களுக்குச் சாத்தியமான வழிவகைளை ஏற்படுத்திக் கொடுக்க இயலாமல் போகின்றது என்பதற்கு இன்று பல்வேறு விடயங்கள் உதாரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பால்,… தமிழ் பேசும் மக்களுக்கு இந்த அரசின் மீதும், இந்த அரசினைக் கொண்டுவந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பினர் மீதும் இருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று எமது மக்கள் சந்தித்து வரும் பலத்த ஏமாற்றங்களுக்கு யார் காரணம் என்பது குறித்தே நான் பேச விரும்புகிறேன். தமக்கு வாக்களித்தால் தமிழர் வாழ்வு விடியும் என்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள்!…

வேதாளாம் குடி புகுந்த வீடு கூட விடியும்! ஆனாலும் அங்கு வெளிச்சம் வராது!… இந்த உண்மையைக் கூட உணர மறுத்து, தரகு அரசியல் தமிழ்க் கட்சி தலைமைகளின் தகிடு தத்தங்களும், மலையைப் புரட்டி,.. மா கடலையும் தாண்டி,.. சொர்க்க வாசலுக்குத் தமிழர்களை அழைத்துச் செல்வோம் என்ற அடைய முடியாத ஆசைகளுக்கும்,… வாக்களித்து ஆணை வழங்கிய தவறை இன்று தமிழ் பேசும் மக்கள் உணரத்தொடங்கி விட்டார்கள்.

இது தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலத்தில் நிலைத்திருக்கும் அரசு! அந்த வாக்குப் பலத்தை அரசுக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள் யார்?.. அவ்வாறு தமிழர்களின் ஆதரவை பெற்றவர்களும், இந்த ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்து வருபவர்கள்,.. அரசிடமிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?..

இந்த அரசு ஆட்சி ஏறிய போது,. அதற்கு ஆதரவளித்த தரகு அரசியல் தமிழ் கட்சிகள் தமது அரசியல் பலத்தை வைத்து பேரம் பேசி பெற்றதுதான் என்ன?..

ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த போதுகூட ஓடிச்சென்று இந்த அரசைக் காப்பாற்றி தாம் இன்றும் ஒட்டுண்ணிகளே என்பதை நிரூபித்தவர்களே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் வாக்குறுதி அளித்த தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்களா? என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: