ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியேரும் கலந்து சிறப்பிப்பு!

Friday, February 11th, 2022

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்றையதினம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா பல்கலைக் கழகத்தினை அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிதிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் கலாசார முறைப்படி பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்பதாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வளாகமாக கருவாகி, இன்று தனித்துவமான பல்கலைக்கழகமாக உருவாகி இருக்கும் வவுனியா பல்கலைக் கழகத்தின் பெயர் பலகையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்..

இதேவேளை வன்னிப் பிரதேச எதிர்காலச் சந்ததியினர் தொழில்நுட்ப உலகை சிறப்பாக எதிர்கொள்வதற்கு தயார்ப்படுத்தும் வகையில் வவுனியா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் வவுனியாப் பல்கலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே நாட்டின் 17 ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முன்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக  வவுனியா வளாகம்  வவுனியா  பல்கலைக்கழகம் என  பெயரிடப்பட்டு   வர்த்தமானி அறிவித்தல் கடந்த  2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இதுவரை  400 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: