கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோகிக்க வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா!
Thursday, March 2nd, 2017
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால், அப் பொருட்களை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ,பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கென பொருட்களை விநியோகிக்கக் கூடிய கட்டமைப்புகள் அரசிடம் வலுவுள்ளதாக இல்லாத நிலையில், அச் சங்கங்கள் தனியாரிடமிருந்தே பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. இதனூடாக மேற்படி சங்கங்கங்கள் தம்மை பராமரித்துக் கொள்ளும் நிலையையே தொடருகின்றன.
இவ்வாறானதொரு நிலையில,; அரசின் கட்டுப்பாட்டு விலைக்கே பொருட்கள் விற்கப்பட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றபோது, அச் சங்கங்களால் அவ்வாறு விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்படுவதால், அச் சங்கங்களின் வர்த்தக செயற்பாடுகள் தடைபடுகின்றன. இதனால் அச்சங்கங்கள் பாரிய பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளுக்கு உட்படுகின்றன. வர்த்தகப் போட்டிச் சந்தைகள் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மேற்படிச் சங்கங்களுக்கு இத்தகைய நிலையானது மேலும், மேலும் பாதிப்பினையே கொண்டு தரும்.
எனவே, கட்டுப்பாட்டு விலைகளில் விற்கத்தக்க வகையில் அப் பொருட்களை கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகஞ் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன், ஏற்கனவே தனியார்த் துறையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்று முடிப்பதற்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|