கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, December 19th, 2019


கடந்த ஆட்சிக்காலத்தில் வெடுக்குநாரி விவகாரத்திற்கு தீர்வுகாணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்திய தடங்கல் காரணமாக குறித்த பிரச்சினை தற்போதும் நீடித்து வருவதாக கடற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று(19.12.2019) வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினர் சந்தித்து தமது ஆலயத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

நெடுக்கு நாரி ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களம் உரிமைகோருவது தொடர்பான பிரச்சினையில் தலையிட்டு ஆலயத்தில் பிரதேச மக்கள் தொடர்ந்தும் எந்தவித இடையூறும் இன்றி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விவகாரம் தங்களுடைய பிரதேசத்தை சேர்ந்த பிரச்சினை என்ற கருத்தை தெரிவித்து தடை ஏற்படுத்தினர் எனினும், அவர்கள் ஆதரவு கொடுத்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்தும் எதனையும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, வவுனியா வாடிவீட்டில் நடைபெற்ற சந்திப்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை, கடந்த ஆட்சியின்போது ஆரம்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற வீட்டுத்திட்ட பயனாளர்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை கவருவதற்காக தேர்தல் காலத்தில் நியமிக்கப்பட்டு தற்போது நிர்க்கதியாக நிற்கும் செயற்திட்ட உதவியாளர்கள் உட்பட பல்வேறுதரப்பினரும் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமைச்சர்   கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னால் கணிசமான வாக்குகளை தற்போதை ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்காத நிலையில் அனைத்து விடயங்களையும் சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் எடுத்து செல்வதில் தயக்கம் காணப்படுவதாகவும், சில மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை தமிழ் மக்கள் தனக்கு வழங்கினால் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை தன்னால் பெற்றுத்தர முடியும் என்ற உறுதியையும் வழங்கினார்.

Related posts:


மகிழ்ச்சிப் பெரு வாழ்வின் நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...